கள்ளக்குறிச்சி மாணவி மரணம் தொடர்பான வழக்கை சிபிசிஐடி விசாரிக்கை கோரிய மனு நாளை சென்னை உயர்நீதிமன்றத்தில் விசாரணைக்கு வருகிறது. மாணவியின் தந்தை ராமலிங்கம் தொடர்ந்த வழக்கை நாளை விசாரிப்பதாக நீதிபதி சதீஷ்குமார் அறிவித்துள்ளார்.

மாணவியின் தந்தை தாக்கல் செய்த மனுவில்,எங்கள் குழந்தையின் மரணத்தில் சந்தேகம் இருப்பதால் தங்கள் தரப்பில் மருத்துவர்களை கொண்டு மறு உடல் கூராய்வு செய்ய வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. ஆனால் காவல்துறை தரப்பில், முன்பு நடத்தப்பட்ட உடல் கூராய்வு வீடியோ எடுக்கப்பட்டுள்ளதால், முறையாக விசாரணை நடத்தப்பட்டு வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் பிரேத பரிசோதனையின் அறிக்கையை நாளை வழக்கு விசாரணையின் போது, காவல்துறையினர் தாக்கல் செய்யவுள்ளனர்.

Add Asianetnews Tamil as a Preferred SourcegooglePreferred

இரு தரப்பு வாதங்களுக்கு பின்பு, பள்ளி மாணவி உயிரிழந்த விவகாரம் குறித்து சிபிசிஐடி விசாரனை நடத்த உத்தரவிடப்படுமா என்பது தெரியவரும். கள்ளக்குறிச்சி மாவட்டம் சின்னசேலம் அருகே கனியாமூர் சக்தி மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியில் 12 ஆம் வகுப்பு படித்த வந்த ஸ்ரீமதி எனும் மாணவி மரணம் தொடர்பான விவகாரம் தமிழ்நாடு முழுக்க பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. மாணவி மாடியிலிருந்து கீழே குதித்து தற்கொலை செய்து கொண்டதாக பள்ளி நிர்வாகம் தெரிவித்து வரும் நிலையில், மாணவியின் இறப்பு சந்தேகம் இருப்பதாக கூறி போராட்டம் தீவிரமடைந்துள்ளது. 

மேலும் படிக்க:கள்ளக்குறிச்சி வன்முறை: வாட்ஸ் அப் குழு மூலம் கூடிய கூட்டம்...போலீஸ் விசாரணையில் அதிர்ச்சி தகவல்

கடந்த 4 நாட்களாக அவரது உறவினர்கள் தொடர் போராட்டத்தில் ஈடுபட்டு வந்த நிலையில் இன்று அது கலவரமாக மாறியுள்ளது. பள்ளிக்குள் நுழைந்து போராட்டத்தில் ஈடுபட்ட வன்முறையாளர்கள், 50க்கும் மேற்பட்ட பள்ளியின் வாகனங்களுக்கு தீவைத்துள்ளனர். மேலும் டிராக்டர் கொண்டு பள்ளி வாகனங்களை இடித்து நொறுக்கியுள்ளனர். மேலும் சென்னை - சேலம் நெடுஞ்சாலையில் சாலை மறியல் ஈடுபட்ட கும்பல், போலீசார் தடுப்புகளை உடைத்து வன்முறையில் ஈடுபட்டனர். காவல்துறை மீது கல்வீச்சு தாக்குதலை நடத்தினர். போலீஸ் வாகனங்களை தீ வைத்து எரித்தனர். இதனால் நிலைமைக் கட்டுபடுத்த காவல்துறையினர் வானத்தை நோக்கி துப்பாக்கிச் சூடு நடத்தினர். 

கள்ளக்குறிச்சி, சின்னசேலம், நயினார்பாளையம் ஆகிய பகுதிகளில் 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. கலவரத்தில் ஈடுபட்டவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என எச்சரிக்கப்பட்டுள்ளது. பள்ளி மாணவி மரணம் தொடர்பாக வெளிப்படையான விசாரணை மேற்கொள்ளப்பட்டுள்ளது என்று ஆட்சியர் தெரிவித்துள்ளார். போராட்டக்காரர்களை அதிரடி படையினர் தடியடி நடத்தி கலைத்து வருகின்றனர். மேலும் கண்ணீர் புகைக்குண்டு வீசியும் போராட்டக்காரர்களை அப்புறப்படுத்தி வருகின்றனர். 

மேலும் படிக்க:கலவரத்தில் 17 போலீசாருக்கு காயம்.. திடீரென்று வன்முறை மூண்டது எவ்வாறு..? எஸ்.பி பரபரப்பு தகவல்..

வன்முறையில் 17 காவல் துறையினருக்கு காயம் ஏற்பட்டுள்ளதாக எஸ்.பி தெரிவித்தார். இதனிடையே டிஜிபி சைலேந்திர பாபு, உள்துறை செயலாளர் பணீந்திர ரெட்டி ஆகியோர் சம்பவ இடத்திற்கு விரைந்துள்ளனர். மேலும் கலவரம் கட்டுக்குள் கொண்டுவரப்பட்டதாகவும் அமைதி நடவடிக்கை தொடர்வதாகவும் மாவட்ட நிர்வாகம் தகவல் தெரிவித்துள்ளது. அரசின் மீது நம்பிக்கை வைத்து மக்கள அமைதி காக்க வேண்டும் என்று முதலமைச்சர் தெரிவித்துள்ளார்.