தமிழக அரசு கோயில் சிலை திருட்டு வழக்குகளில் சிறப்பு கவனம் செலுத்த வேண்டும் - திருவடிக்குடில் சுவாமிகள் கோரிக்கை....
நாகப்பட்டினம்
தமிழக அரசு கோயில் சிலை திருட்டு வழக்குகளில் சிறப்பு கவனம் செலுத்த வேண்டும் என்று ஜோதிமலை இறைபணி திருக்கூட்டத்தின் நிறுவனர் திருவடிக்குடில் சுவாமிகள் கோரிக்கை விடுத்துள்ளார்.
ஜோதிமலை இறைபணி திருக்கூட்டத்தின் நிறுவனர் திருவடிக்குடில் சுவாமிகள் நேற்று அறிக்கை ஒன்றை வெளியிட்டார்.
அதில், "நாகப்பட்டினம் மாவட்டம், செம்பனார்கோவில் அருகே உள்ள வலத்தான்பட்டினம் வரதராஜப் பெருமாள் கோயிலிலிருந்து கடந்த சில நாள்களுக்கு முன்பு, சிலை, வெள்ளிக் கிரீடம், திருமாங்கல்யம் ஆகியன களவுப் போன சம்பவம், டெல்டா மாவட்டங்களில், கோயில் சிலைகள் திருட்டு, உண்டியல் உடைப்பு போன்ற சம்பவங்கள் சாதாரண நிகழ்வாக தொடர்ந்து வருவதற்கு உதாரணம்.
காவல் துறைத் தலைவர் பொன். மாணிக்கவேலு தலைமையிலான சிலை திருட்டு மற்றும் கடத்தல் தடுப்பு பிரிவினரின் தீவிர நடவடிக்கைகள் ஆறுதலும், நம்பிக்கையும் அளிப்பதாக உள்ளன.
இருப்பினும், கோயில் சிலை திருட்டு வழக்குகளுக்கு அரசு போதுமான முக்கியத்துவம் அளிக்கவில்லை என்றே தெரிய வருகிறது.
சாதாரண அடிதடி வழக்குகளைவிட குறைந்தளவு கவனத்துடனேயே காவல் துறையினர், சிலை திருட்டு வழக்குகளை கையாளுவது வருத்தமளிப்பதாக உள்ளது.
இந்த நிலையில், மாற்றத்தை ஏற்படுத்த வேண்டியது அவசியம் என்ற வகையில், தமிழக அரசு கோயில் சிலை திருட்டு வழக்குகளில் சிறப்பு கவனம் செலுத்த உத்தரவிட்டால் மட்டுமே, கோயில்களின் பாதுகாப்பை உறுதி செய்ய முடியும" என்று அதில் தெரிவித்துள்ளார்.