வெட்டவந்த தந்தையை உருட்டுக் கட்டையால் அடித்தே கொன்ற மகன் கைது...
திருவள்ளூர்
திருவள்ளூரில், அரிவாளால் தன்னை வெட்டவந்த தந்தையை உருட்டுக் கட்டையால் அடித்தே கொன்ற மகன் கைது செய்யப்பட்டார்.
திருவள்ளூர் மாவட்டம், திருத்தணி அருகே உள்ள நெமிலி காலனியைச் சேர்ந்தவர் தேவகுமார் (45). இவரது மகன் தாவித் என்ற டேவிட்ராஜ் (20). தேவகுமாரின் தந்தை அமாவாசை (65).
இவர்கள் மூவரும் ஒரே வீட்டில் வசித்து வந்தனர். தேவகுமார் தினமும் சாராயம் குடித்துவிட்டு வீட்டுக்கு வருவதால் தேவகுமாருக்கும், அவரது மகன் டேவிட்ராஜுக்கும் அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்தது.
இந்த நிலையில் நேற்று முன்தினம் இரவு மீண்டும் சாராயம் குடித்துவிட்டு வீட்டுக்கு வந்த தேவகுமாருக்கும், டேவிட் ராஜுக்கும் ஏற்பட்ட தகராறு முற்றியது. இதனையடுத்து டேவிட்ராஜ் தனது தந்தையை கயிற்றால் கட்டி வீட்டில் உள்ள அறையில் வைத்துவிட்டு வெளியே சென்றுவிட்டார்.
அப்போது, அங்கு வந்த அமாவாசை தனது மகன் தேவகுமார் கட்டி போடப்பட்டுள்ளது கண்டு அதிர்ச்சியடைந்து அவரது கட்டுகளை அவிழ்த்துவிட்டார். அப்போது அங்கு வந்த டேவிட்ராஜை பார்த்த தேவகுமார் அங்கிருந்த அரிவாளால் எடுத்து டேவிட்ராஜை வெட்ட வந்தார். உடனே டேவிட்ராஜ் உருட்டுகட்டையால் தேவகுமாரை தாக்கினார். இதில் தேவகுமாருக்கு பலத்த காயம் ஏற்பட்டது.
பின்னர், அவரை மீட்டு சிகிச்சைக்காக திருத்தணி அரசு மருத்துவமனையில் அனுமதித்தனர். அங்கிருந்து அவரை மேல் சிகிச்சைக்காக திருவள்ளூர் அரசு மருத்துவமனையில் அனுமதித்தனர். அங்கு தேவகுமார் சிகிச்சை பலனின்றி இறந்துபோனார்.
இதுகுறித்து கனகம்மாசத்திரம் காவலாளர்கள் வழக்குப்பதிந்து டேவிட்ராஜ் மற்றும் அமாவாசையிடம் விசாரணை நடத்தி வருகின்றனர். இதுதொடர்பாக டேவிட்ராஜ் காவலாளர்கள் கைதும் செய்தனர்.
அரிவாளால் தன்னை வெட்டவந்த தந்தையை உருட்டுக் கட்டையால் மகன் அடித்தே கொன்ற சம்பவம் அந்தப் பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.