திருப்பத்தூர் அருகே சொத்துக்காக தனது தாயை சுத்தியலால் தாக்கி கொலை செய்த மகனை போலீசார் கைது செய்தனர். தாயின் இறப்பிற்குப் பிறகே சொத்தை அனுபவிக்க முடியும் என்பதால், அவரை கொலை செய்துவிட்டு வீட்டை விற்க திட்டமிட்டதாக மகன் வாக்குமூலம் அளித்துள்ளார்.

திருப்பத்துார் மாவட்டம் கந்திலி அருகே கசிநாயக்கன்பட்டி கிராமத்தை சேர்ந்தவர் ஆதிமூலம்(64). இவருடைய மனைவி வெங்கடேஸ்வரி (54). இந்த தம்பதிக்கு வெற்றிச்செல்வன் என்ற மகனும், கோமதி என்ற மகளும் உள்ளனர். மேலும் வெற்றி செல்வன் சிஏ முடித்து சென்னையில் உள்ள ஆடிட்டரிடம் உதவியாளராக வேலை செய்து வருகிறார்.

Add Asianetnews Tamil as a Preferred SourcegooglePreferred

தாய் கொலை

இந்நிலையில் ஆதிமூலத்துகு சென்னையில் சொந்தமாக மற்றொரு வீடு உள்ளது. அந்த வீட்டை விற்று பணத்தை தர வேண்டும் அல்லது விலை உயர்ந்த பைக் வாங்கி தர வேண்டும் என அவ்வப்போது தந்தையிடம் தகராறு ஈடுபட்டு வந்துள்ளார். இந்நிலையில் நேற்று முன்தினம் பாஉசா. நகர் பகுதியில் தங்கியிருந்த தாயார் வெங்கடேஸ்வரியை வெற்றி செல்வன் பார்க்க சென்றுள்ளார். அப்போது வீட்டை விட்டு பணம் தர வேண்டும் என மீண்டும் தகராறு ஏற்பட்டதில் தாயார் வெங்கடேஷ்வரியை சுத்தியால் தலையில் பலமாக தாக்கி கொலை செய்துள்ளார். பின்னர் அங்கிருந்து தப்பி சென்றார். இந்த சம்பவம் தொடர்பாக வழக்குப்பதிவு செய்த போலீசார் கொலை செய்துவிட்டு தப்பித்து சென்ற வெற்றி செல்வனை பிடிக்க தனிப்படையை அமைத்து தேடிவந்தனர். இந்நிலையில் ஆதிமூலத்திற்கு சென்னை மாங்காடு பகுதியில் உள்ள மற்றொரு வீட்டில் வெற்றிச்செல்வன் பதுங்கி இருப்பது தெரிய வந்தது.

மகன் கொடுத்த அதிர்ச்சி வாக்குமூலம்

இதன் காரணமாக தனிப்படையினர் வெற்றிச்செல்வனை கைது செய்தனர். மேலும் இது குறித்து வெற்றி செல்வன் அளித்த வாக்குமூலத்தில் நான் வேலை பார்க்கும் நிறுவனத்தில் எனக்கு போதிய சம்பளம் கிடைக்கவில்லை. இதனால் பர்னிச்சர் கடை வைப்பதற்காக எனது பெற்றோரிடம் பணம் மற்றும் டூ வீலர் வாங்கி தரச்சொல்லி கேட்டேன். ஆனால் அவர்கள் மறுத்துவிட்டனர். இதையடுத்து பணம் தரவில்லை என்றால் சொத்தை பிரித்து தாருங்கள் என கேட்டேன். அதற்கு சென்னை மாங்காட்டில் எனது அம்மா வெங்கடேஸ்வரி பெயரில் உள்ள வீட்டை எனக்கு உயில் எழுதி கொடுத்தனர். அதில் எனது அம்மாவின் இறப்புக்கு பின்னர் தான் அந்த சொத்தை நான் அனுபவிக்க முடியும் என குறிப்பிட்டு உள்ளனர். இதனால் எனது அம்மாவின் மீது எனக்கு அதிக கோபம் ஏற்பட்டது.

சிறையில் அடைப்பு

மேலும் எனது அம்மாவை கொலை செய்துவிட்டால், வீட்டை விற்று கொள்ளலாம் என நினைத்து சுத்தியலால் எனது அம்மாவின் தலையில் முதலில் அடித்து, கத்தியால் குத்தியும் கொலை செய்தேன். பின்னர் வீட்டில் இருந்த டூ வீலரை எடுத்து கொண்டு ஜோலார்பேட்டை சென்று, அங்கிருந்து பஸ் மூலம் சென்னைக்கு சென்றுவிட்டேன். அங்கு வைத்து போலீசார் என்னை கைது செய்துவிட்டனர் என தெரிவித்தார். அதனைத் தொடர்ந்து வெற்றிவெற்றிச்செல்வனை கோர்ட்டில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர். மேலும் கடந்த 2023ஆம் ஆண்டு சொத்துக்காக தந்தை ஆதிமூலத்தை கத்திரிக்கோலால் 14 இடங்களில் குத்தி கொலை செய்யும் முயற்சியில் ஈடுபட்ட சம்பவம் குறிப்பிடத்தக்கது.