கமல் கட்சியில் இருந்து முக்கிய புள்ளி எஸ்கேப்.! திடீரென ராஜினாமா கடிதம் கொடுத்தது ஏன்.? சிவ.இளங்கோ விளக்கம்
தற்போதைய அரசியல் சூழலில் மக்கள் நீதி மய்யத்தில் தொடர்ந்து பயணிக்க இயலாத நிலையில் உள்ளேன். எனவே நான் தற்போது வகித்து வரும் மாநில நிர்வாகக்குழு & மாநிலச் செயலாளர் உள்ளிட்ட அனைத்து பொறுப்பிகளில் இருந்து விலகுவதாக சிவ.இளங்கோ தெரிவித்துள்ளார்.
![Siva Elango has resigned as the state secretary of the Makkal Needhi Maiyam KAK Siva Elango has resigned as the state secretary of the Makkal Needhi Maiyam KAK](https://static-ai.asianetnews.com/images/01j1c0cpmcgyfctczttwxs64h0/whatsapp-image-2024-06-27-at-10-17-52-am_363x203xt.jpg)
திராவிடத்திற்கு மாற்றாக மய்யம்
தமிழகத்தில் திராவிட கட்சிகளுக்கு மாற்றாக புதிய கட்சியை தொடங்கினார் நடிகர் கமல்ஹாசன், சட்டமன்ற மற்றும் நாடாளுமன்ற தேர்தல்களில் தனித்து போட்டியிட்டார். ஆனால் மக்கள் ஆதரவு கிடைக்காத காரணத்தால் திமுகவுடன் கூட்டணி வைத்துவிட்டார் கமல்ஹாசன், இதனால் அதிருப்தி அடைந்த மக்கள் நீதி மய்யத்தின் நிர்வாகிகள் அடுத்தடுத்து விலகி வருகின்றனர். இந்தநிலையில் மக்கள் நீதிமய்யத்தின் மாநில செயலாளர் சிவ.இளங்கோ கட்சியில் இருந்து விலகுவதாக அறிவித்துள்ளார். இது தொடர்பாக சிவ. இளங்கோ வெளியிட்டுள்ள அறிக்கையில், மக்கள் நீதி மய்யத்தில் மாநில நிர்வாகக்குழு & மாநிலச் செயலாளராக இணைந்து இன்றுடன்(26-06-2024) 3 ஆண்டுகள் நிறைவு பெற்றது.
சிவ. இளங்கோ ராஜினாமா
என்மீது நம்பிக்கை வைத்து இந்த பொறுப்பை வழங்கிய தங்களுக்கு இத்தருணத்தில் நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன். தங்களுடனான இந்த மூன்றாண்டு கால அரசியல் பயணம் பெரிய அனுபவமாக அமைந்தது. தற்போதைய அரசியல் சூழலில் மக்கள் நீதி மய்யத்தில் தொடர்ந்து பயணிக்க இயலாத நிலையில் உள்ளேன். எனவே நான் தற்போது வகித்து வரும் மாநில நிர்வாகக்குழு & மாநிலச் செயலாளர் (கட்டமைப்பு) மற்றும் உறுப்பினர் உள்ளிட்ட அனைத்து பொறுப்புகளில் இருந்தும் விலகுகிறேன். மக்கள் நீதி மய்யத்தின் மாவட்ட வளர்ச்சிப் பணிகள் தொடர்பாக 54 நாட்கள், 66 கூட்டங்கள், 130 சட்டமன்ற தொகுதிகளில் எனது தலைமையில் முன்னெடுத்த மாவட்ட ஆலோசனைக் கூட்டத்தின் 293 பக்கம் ஆய்வறிக்கையினை இத்துடன் இணைத்துள்ளேன்.
கட்சியில் தொடர முடியாத நிலை
மக்கள் நீதி மய்யத்தில் இணைவதற்கு முன்பு தகவல் பெறும் உரிமைச் சட்டம், கிராமசபை, ஏரியாசபை உள்ளிட்டவை குறித்து கட்சியினருக்கு பயிற்சி அளித்தது போன்று தாங்கள் கேட்டுக் கொண்டால், தொடர்ந்து இதுபோன்ற பயிற்சிகளை மய்ய உறவுகளுக்கு கொடுக்க தயாராக உள்ளேன் என்பதையும் இதன் மூலம் தெரிவித்துக் கொள்கிறேன் என சிவ.இளங்கோ தெரிவித்துள்ளார்.