தடை செய்யப்பட்ட வலையை பயன்படுத்தி மீன் வளத்தை அழிக்கிறார்கள்! குமுறும் நாட்டுப்படகு மீனவர்கள்...
இராமநாதபுரம்
தடை செய்யப்பட்ட வலையை பயன்படுத்தி மீன் வளத்தை அழிக்கிறார்கள் எனவே அவர்கள் மீது உடனடியாக கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று நாட்டுப்படகு மீனவர்கள் ஆட்சியரிடம் கோரிக்கை வைத்துள்ளனர்.
பாம்பன் புனித சவேரியார் கரைக்கடல் நாட்டுப்படகு மீனவர் நலச்சங்கம் சார்பில் அதன் தலைவர் மெர்வின், செயலாளர் ஆரோக்கியம், பாம்பன் சமூக ஆர்வலர் அந்தோணி கிங்ஸ்டன் ஆகியோர் இராமநாதபுரம் மாவட்ட ஆட்சியர் மற்றும் அதிகாரிகளுக்கு மனு ஒன்றை அனுப்பி வைத்தனர்.
அந்த மனுவில், "தமிழக அரசால் சுருக்குமடி வலை தடை செய்யப்பட்டுள்ளது. பாம்பன் தெற்குவாடி பகுதியில் தடை செய்யப்பட்ட சுருக்குமடி வைத்து மீன்பிடிக்கின்றனர். இதனால் மீன் வளங்கள் அழியக் கூடிய வாய்ப்புகள் அதிகரித்து வருகிறது. மீன்வளம் அழிவதோடு ஆண்டு முழுவதும் மீன்பிடிக்கும் மீனவர்களுக்கு தொழில் நட்டமும் ஏற்படும்.
சுருக்குமடி வைத்து மீன்பிடிப்பவர்கள் அதிக குதிரைத்திறன் கொண்ட எந்திரங்களை பயன்படுத்தியும், 80 அடி நீளம் வரை பைபர் படகுகளை பயன்படுத்தியும் மீன்வளத்தை அழிக்கின்றனர்.
எனவே, சுருக்குமடி வைத்து மீன்பிடிப்பவர்கள் மீது உடனடியாக மாவட்ட நிர்வாகமும், மீன்துறையினரும் கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும்" என்று அதில் கூறப்பட்டுள்ளது.