பேருந்துகளின் பராமரிப்பு, ஓட்டுநர் பணிநேரம், பாதுகாப்பு விதிமுறைகள் ஆகியவற்றில், திமுக அரசு காட்டும் அலட்சியத்தின் விளைவே இந்த தொடர் விபத்துகள் என்று அண்ணாமலை தெரிவித்துள்ளார்.

கடலூர் மாவட்டம் திட்டக்குடி அருகே அரசு விரைவு பேருந்தின் டயர் வெடித்ததால் கட்டுப்பாட்டை இழந்த பேருந்து சாலையின் தடுப்பை தாண்டி எதிர்புற சாலையில் சென்று கொண்டிருந்த இரண்டு கார்கள் மீது மோதியது. இந்த கோர விபத்தில் இரண்டு கார்களிலும் பயணம் செய்த 4 பெண்கள் உள்பட 9 பேர் பலியாயினர்.

Add Asianetnews Tamil as a Preferred SourcegooglePreferred

விபத்தில் 9 பேர் பலி

பேருந்தின் டயர் வெடித்ததே இந்த விபத்துக்கு முழு காரணம் ஆகும். இந்த பேருந்தை ஓட்டிசென்ற ஓட்டுநர் மதுரை ஒத்தக்கடை பகுதியை சேர்ந்த தாஹா அலி மீது அஜாக்கிரதையாக வாகனம் ஓட்டுதல் உள்ளிட்ட 4 பிரிவுகளின் கீழ் போலீசார் வழக்குப்பதிவு செய்து கைது செய்தனர். தமிழகத்தில் சில‌ அரசு பேருந்துகள் பிரேக் பிடிக்காதது உள்ளிட்ட பல காரணங்களால் விபத்து நேரிடுகின்றன. அரசு பேருந்துகள் முறையாக பராமரிக்கப்படுவதில்லை என்ற குற்றச்சாட்டு எழுந்துள்ளது.

அண்ணாமலை கண்டனம்

இந்த நிலையில், பேருந்து விபத்தில் 9 பேர் பலியானதற்கு திமுக அரசின் அலட்சியமே காரணம் என்று அண்ணாமலை தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அண்ணாமலை எக்ஸ் தளத்தில் வெளியிட்ட பதிவில், ''கடலூர் மாவட்டம் திட்டக்குடி அருகே, அரசுப் பேருந்து மோதி, 9 பேர் உயிரிழந்த செய்தி, மிகுந்த அதிர்ச்சியும் வருத்தமும் அளிக்கிறது. உயிரிழந்தவர்கள் குடும்பத்தினருக்கு, ஆழ்ந்த இரங்கல்களைத் தெரிவித்துக் கொள்கிறேன். சமீபகாலமாக, அரசுப் பேருந்துகள் விபத்துக்குள்ளாவதும், உயிரிழப்புகள் ஏற்படுவதும், மிகவும் அதிகரித்திருக்கின்றன.

பேருந்துகள் பராமரிப்புக்கு நிதி ஒதுக்கப்படுகிறதா?

தொடர்ச்சியாக நடக்கும் அரசு பேருந்து விபத்துகள், பேருந்துகளின் பராமரிப்பு, ஓட்டுநர் பணிநேரம், பாதுகாப்பு விதிமுறைகள் ஆகியவற்றில், திமுக அரசு காட்டும் அலட்சியத்தின் விளைவே இந்த தொடர் விபத்துகள். அரசுப் பேருந்துகள் பராமரிப்புக்கு நிதி ஒதுக்கப்படுகிறதா, அந்த நிதி எல்லாம் எங்கே செல்கிறது என்ற கேள்வி எழுகிறது.

திமுக அரசு நடவடிக்கை எடுக்கவில்லை

கடந்த மாதமே, அரசுப் பேருந்துகளின் பாதுகாப்பு, பராமரிப்பு குறித்த அலட்சியத்தைப் பற்றி எச்சரித்திருந்தோம். ஆனால் திமுக அரசு எந்த நடவடிக்கையும் எடுக்காததன் விளைவு தான் நேற்றைய பேருந்து விபத்து. தொடர் விபத்துக்களையும், அது தொடர்பான எச்சரிக்கைகளையும் உதாசீனப்படுத்திய திமுக அரசே இந்த விபத்துக்கான முழு பொறுப்பு'' என்று கூறியுள்ளார்.