Separate Department for Public Distribution Program - Ration Shop Workers Association Resolution ...

திருச்சி

ஏசியாநெட் தமிழ்-ஐ உங்கள் முதன்மைத் தேர்வாக்குங்கள்googlePreferred

தமிழகத்தில் ரேசன் கடைகள் குறைகளின்றி சிறப்பாக செயல்பட பொது வினியோக திட்டத்திற்கு என தனி துறை உருவாக்கப்பட வேண்டும் என்று திருச்சியில் நடந்த மாநில செயற்குழு கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

தமிழ்நாடு அரசு ரேசன் கடை பணியாளர் சங்கத்தின் மாநிலச் செயற்குழுக் கூட்டம் திருச்சி மாவட்டத்தில் நேற்று நடைப்பெற்றது. 

இதற்கு அதன் மாநிலத் தலைவர் ராமச்சந்திரன் தலைமை வகித்தார். மாநிலத் துணைத் தலைவர் ராமலிங்கம் வரவேற்றுப் பேசினார். அரசுப் பணியாளர் சங்கத்தின் சிறப்புத் தலைவர் கு.பாலசுப்பிரமணியன் சிறப்புரை ஆற்றினார்.

இந்தக் கூட்டத்தில், "தமிழகத்தில் ரேசன் கடைகள் குறைகளின்றி சிறப்பாக செயல்பட பொது வினியோக திட்டத்திற்கு என தனி துறை உருவாக்கப்பட வேண்டும். 

கிடங்குகளில் இருந்து ரேசன் கடையில் பொருட்களை இறக்கி வைக்கும்வரை எடையளவு குறையாமல் இருக்க 100 சதவீதம் கணினி மயமாக்கப்பட வேண்டும். 

தமிழ்நாடு நுகர்பொருள் வாணிப கழக பணியாளர்களுக்கு இணையான ஊதியம் வழங்க வேண்டும். 

ரேசன் கடை பணியாளர்களுக்கு ஓய்வூதியம் உள்ளிட்ட 30 அம்ச கோரிக்கைகளை நிறைவேற்றக்கோரி வருகிற மே மாதம் 4-ஆம் தேதி சென்னை அரசு விருந்தினர் விடுதி அருகில் மாபெரும் ஆர்ப்பாட்டம் நடத்தி, முதலமைச்சரிடம் மனு கொடுப்பது.

மே 21-ஆம் தேதி மாநிலம் முழுவதும் ஒரு நாள் அடையாள வேலை நிறுத்த போராட்டம் செய்து, மாவட்டத் தலைநகரங்களில் ஆட்சியர் அலுவலகம் அல்லது கூட்டுறவு சங்க இணை பதிவாளர் அலுவலகங்கள் முன் உண்ணாவிரதம் இருப்பது. 

மேலும், ஸ்மார்ட் கார்டு, பி.ஓ எஸ். கருவிகள் மூலம் பொருட்கள் வினியோகம் செய்யப்பட்டு வருவதால் தேவை இல்லாத ஆய்வு பணிகளை அதிகாரிகள் தவிர்க்க வேண்டும் என கேட்டுக்கொள்வது" போன்ற தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

இந்தக் கூட்டத்தில் மாநிலத் துணைத் தலைவர்கள் பிரகாஷ், செல்லத்துரை, விசுவநாதன், பொதுச் செயலாளர் ஜெயச்சந்திர ராஜா, பொருளாளர் நெடுஞ்செழியன், திருச்சி மாவட்ட தலைவர் ராமமூர்த்தி உள்பட நிர்வாகிகள் பங்கேற்றனர்.