படித்து முடித்ததும் மாணவர்களுக்கு தொழிற்பயிற்சி...! அமைச்சர் செங்கோட்டையனின் அடுத்த பலே திட்டம்...!
அரசுப் பள்ளி மாணவர்கள் சுமார் 20 லட்சம் பேருக்கு பள்ளிப் படிப்பு முடித்து மேல் படிப்பிற்கு செல்லும் போது அவர்களது விருப்பத்தின் அடிப்படையில் தொழிற்பயிற்சியும், திறன் மேம்பட்டு பயிற்சியும் வழங்கப்படும் என்று பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்துள்ளார்.
எடப்பாடி அமைச்சரவை தலைமையேற்றபோது பள்ளிக்கல்வி துறை அமைச்சராக பொறுப்பேற்றவர் செங்கோட்டையன். இவர் பொறுப்பேற்றதிலிருந்து பள்ளிக்கல்வி துறையில் பல்வேறு அதிரடி திட்டங்களை கொண்டு வந்து நற்பெயர் வாங்கி வருகிறார்.
அதாவது நீட்டை எதிர்கொள்ளும் வகையில் பயிற்சி மையங்கள் அமைத்து உத்தரவிட்டுள்ளார். மேலும் மாணவர்களின் பொதுதேர்வு குறித்த அறிவிப்புகளும் மாணவர்கள் மத்தியிலும் மக்கள் மத்தியிலும் வரவேற்பை பெற்றுள்ளது.
இந்நிலையில் சென்னை அண்ணா நூற்றாண்டு நூலகத்தில் இன்று அரசுப்பள்ளி தலைமை ஆசிரியர்கள் மற்றும் தொழிற்கல்வி ஆசிரியர்களுக்கு திறன் உயர்வு பயிற்சியை அமைச்சர் செங்கோட்டையன் தொடங்கி வைத்தார்.
அப்போது செய்தியாளர்களை சந்தித்த அவர், அரசுப் பள்ளி மாணவர்கள் சுமார் 20 லட்சம் பேருக்கு பள்ளிப் படிப்பு முடித்து மேல் படிப்பிற்கு செல்லும் போது அவர்களது விருப்பத்தின் அடிப்படையில் தொழிற்பயிற்சியும், திறன் மேம்பட்டு பயிற்சியும் வழங்கப்படும் என தெரிவித்தார்.
நீட் தேர்வு பயிற்சிக்கு 70,412 மாணவர்கள் தேர்வு செய்யப்பட்டு பயிற்சி அளிக்கப்படும் எனவும் சிறந்த மாணவர்கள் 2 ஆயிரம் பேருக்கு பள்ளி பொதுத்தேர்வு முடிந்ததும் தங்கும் விடுதி வசதியுடன் சிறப்பு பயிற்சிகள் அளிக்கப்படும் எனவும் குறிப்பிட்டார்.
மேலும் வெளிநாட்டு தொழில்நுட்பம், கல்வி மற்றும் கலாச்சாரங்களை அறிய ஆண்டுதோறும் 100 மாணவர்களை தேர்ந்தெடுத்து வெளிநாடு அனுப்ப திட்டமிட்டுள்ளதாகவும் அமைச்சர் செங்கோட்டையன் குறிப்பிட்டார்.