முன்னாள் அமைச்சர் கே.ஏ. செங்கோட்டையன், நடிகர் விஜய் தலைமையிலான தமிழக வெற்றிக் கழகத்தில் இணைந்துள்ளார். அவருக்கு உயர்மட்ட மாநில நிர்வாகக் குழுவின் தலைமை ஒருங்கிணைப்பாளர் பதவியும், நான்கு மாவட்டங்களுக்கான அமைப்புச் செயலாளர் பதவியும் வழங்கப்பட்டுள்ளது.

தமிழக வெற்றிக் கழகத்தில் இணைந்துள்ள முன்னாள் அமைச்சர் கே.ஏ. செங்கோட்டையனுக்கு உயர்மட்ட மாநில நிர்வாகக் குழுவின் தலைமை ஒருங்கிணைப்பாளர் பதவி வழங்கப்படுவதாக அக்கட்சியின் தலைவர் விஜய் அறிவித்துள்ளார்.

தவெக தலைவர் விஜய் அறிவிப்பு

இது குறித்து விஜய் வெளியிட்டுள்ள அறிவிப்பில் கூறியிருப்பதாவது:

“கழகத் தோழர்களுக்கு வணக்கம்! தமிழ்நாட்டின் இருபெரும் தலைவர்களோடு பயணித்தவர்: தாம் சார்ந்திருந்த கழகத்தின் வளர்ச்சியில் முக்கியப் பங்காற்றியவர்: அனைவரிடத்திலும் எளிமையோடும் அன்போடும் பண்போடும் பழகி, நன்மதிப்பைப் பெற்றவர்; மூத்த அரசியல் தலைவர், முன்னாள் அமைச்சர் திரு. கே.ஏ.செங்கோட்டையன் அவர்கள். இன்று முதல் நம் தமிழக வெற்றிக் கழகத்தில் இணைந்து, மக்களுக்கான அரசியலில் நம்மோடு பயணிக்க இருக்கிறார். அவரை வாழ்த்தி வரவேற்பதில் பெருமகிழ்ச்சி அடைகிறேன்.

அண்ணன் செங்கோட்டையன் அவர்கள். ஏற்கெனவே அறிவிக்கப்பட்ட 28 பேர் கொண்ட. எனது கண்காணிப்பில் இயங்கும் கழக உயர்மட்ட மாநில நிர்வாகக் குழுவின் தலைமை ஒருங்கிணைப்பாளராக (Chief Coordinator) நியமிக்கப்படுகிறார். இவர் இக்குழுவை வழிநடத்தி. கழகத்தின் அரசியல் செயல்பாடுகளை முன்னெடுக்க எனக்கு உறுதுணையாகச் செயல்படுவார்.

Scroll to load tweet…

நான்கு மாவட்ட அமைப்புச் செயலாளர் பதவி

மேலும் கூடுதலாக, ஈரோடு, கோயம்புத்தூர், திருப்பூர், நீலகிரி ஆகிய மாவட்டங்களுக்கு அமைப்புச் செயலாளராகவும் நியமிக்கப்படுகிறார். என்னோடும் கழகப் பொதுச் செயலாளர் திரு. என்.ஆனந்த் அவர்களோடும் கலந்தாலோசித்து கழகப் பணிகளை, மேற்கண்ட இம்மாவட்டங்களில் மேற்கொள்வார்.

மேலும், அவருடன் தமிழக வெற்றிக் கழகத்தில் தங்களை இணைத்துக்கொண்ட நாடாளுமன்ற முன்னாள் உறுப்பினர் திருமதி சத்தியபாமா, சட்டமன்ற முன்னாள் உறுப்பினர்கள் திரு. வெங்கடாசலம், திரு. முத்துக்கிருஷ்ணன் மற்றும் பிற புதிய உறுப்பினர்களையும் வாழ்த்தி வரவேற்பதில் பெருமகிழ்ச்சி அடைகிறேன்.

கழகத் தோழர்களும் நிர்வாகிகளும் இவர்களுக்கு முழு ஒத்துழைப்பு நல்கிட வேண்டும் எனக் கேட்டுக்கொள்கிறேன்.”

இவ்வாறு தவெக தலைவர் விஜய் தெரிவித்துள்ளார்.