ஆட்சியில் பங்கு வழங்கப்படும் என்ற கருத்து விஜய்யின் பெருந்தன்மையைக் காட்டுகிறது. இது வரவேற்கக்கூடிய ஒன்று என நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் தெரிவித்துள்ளார்.
சிவகங்கை மாவட்டம் காரைக்குடியில் கட்சி நிர்வாகிகள் ஆலோசனை கூட்டத்தில் பங்கேற்க வந்த நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் செய்தியாளர்களை சந்தித்து பேசினார். அப்போது அவர் கூறுகையில், “தேர்தலில் வாக்குகளை அறுவடை செய்யவே அரசு ஊழியர்கள் ஓய்வூதிய திட்டம் அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இது ஏற்கனவே உள்ள கடன் சுமையை மேலும் அதிகரிக்கும். அரசு ஊழியர்களின் நீண்ட நாள் கோரிக்கையை நிறைவேற்றியது மகிழ்ச்சி. ஜாக்டோ ஜியோ வலுவான அமைப்பாக உள்ளது.
பல லட்சம் வாக்குகள் இருப்பதால் அவர்களது கோரிக்கையை அரசு ஏற்றுள்ளது. சம ஊதியம் கேட்டு போராடும் ஆசிரியர்கள், துப்புரவு தொழிலாளர்களுக்கு வலுவான அமைப்பு இல்லாததால் அவர்களுடைய கோரிக்கையை அரசு ஏற்காது.
மோடி பொங்கல் என்று கூறினால் ஓடிப் போங்கள் என்று கூற வேண்டியது தான். எந்த பெருமையும் தமிழர்களுக்கு இருக்கக் கூடாது என நினைப்பது பாஜக அரசு.
கருத்துக்கணிப்பு மீது எங்களுக்கு உடன்பாடு இல்லை. இது கருத்து திணிப்பு. நாங்கள் வாங்கும் வாக்கு மட்டுமே உண்மையான வாக்கு. மற்ற கட்சிகள் அனைத்தும் பணம் கொடுத்து வாக்குகளை வாங்குகின்றன. ஊழல், லஞ்சம், தீண்டாமை, பெண் அடிமைத்தனம் இல்லாத ஒரு புதிய நாட்டை உருவாக்க வேண்டும் என்பது நாம் தமிழர் கட்சி இலக்கு.
மத்திய ஆட்சி அதிகாரத்தில பங்கு உள்ள போது விஜய் ஆட்சியில் பங்கு அறிவிப்பு என்பது தவறு இல்லை. இது விஜயின் பெருந்தன்மையை காட்டுகிறது. இது வரவேற்கத்தக்கது. பிப்ரவரி 21 நாம் தமிழர் கட்சி சார்பில் போட்டியிடும் அனைத்து வேட்பாளர்களும் அறிவிக்கப்படும். கூட்டணி என்பது எப்போதும் கிடையாது - தனித்து தான் போட்டி. தமிழக அரசியலில் நாம் தமிழர் கட்சி வலுவான அடித்தளத்தை ஏற்படுத்தி வருகிறது. வெற்றி பெற காலம் எடுக்கும். மக்கள் நினைத்தால் நிச்சியம் மாற்றம் வரும்.
2026 தேர்தல் எங்களுக்கு எந்த சவாலும் இல்லை. பொதுத் தொகுதியில் தாழ்த்தப்பட்ட இனத்தைச் சேர்ந்தவரை நிறுத்தி திமுக வென்று காட்டுமா? திருமாவளவனை பொதுத் தொகுதியில் நிறுத்தி திமுக வெற்றி பெற வைக்குமா? என கேள்வி எழுப்பினார்.


