ராம் மோகன் ராவ் மகன் விவேக் பார்ட்னரிடம் விசாரணை - ரூ.130 கோடி பண பரிமாற்றம்
தமிழக அரசின் தலைமை செயலாளராக இருந்த ராமமோகன் ராவ் வீட்டில் வருமானவரித்துறையினர் அதிரடி சோதனை நடத்தினர். இதில் பல லட்சம் பணமும், தங்கம் மற்றும் ஆவணங்கள் பறிமுதல் செய்யப்பட்டன. இதைதொடர்ந்து அவரிடம் விசாரித்து வந்தனர்.
நேற்று முன்தினம் அதிகாலையில் ராமமோகன் ராவுக்கு திடீர் நெஞ்சுவலி ஏற்பட்டதாக கூறி, போரூரில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அவருடைய மகன் விவேக், அவரது மனைவிக்கு உடல்நிலை சரியில்லாததால் வருமானவரித்துறை அதிகாரிகள் முன்பு ஆஜராகவில்லை.
இதற்கிடையில், இன்று ராமமோகன் ராவ், மருத்துவமனையில் இருந்து வீடு திரும்புகிறார். இதை தொடர்ந்து, அவரிடம் வருமான வரித்துறை அதிகாரிகள் விசாரணை நடத்த திட்டமிட்டுள்ளனர்.
மேலும், ராமமோகன் ராவ் மகன் விவேக் நடத்தி வந்த நிறுவனத்தின் பங்குதாரராக இருந்தவர் ஆந்திர மாநிலத்தை சேர்ந்த பாஸ்கர் நாயுடு. இவர் தமிழ்நாட்டில் உள்ள அரசு மருத்துவமனைகளில் செக்யூரிட்டி வேலைக்கு ஆட்களை நியமிப்பது தொடர்பாக ஒப்பந்தம் செய்திருந்தார்.
இவர்களது ஒப்பந்தத்தில், ஆண்டுக்கு ரூ.130 கோடி பண பரிமாற்றம் செய்யப்பட்டுள்ளது. இவரிடமும் விசாரணை நடத்த திட்டமிட்டு இருப்பதாக வருமானவரித்துறை முடிவு செய்துள்ளனர்.