பத்து மற்றும் பன்னிரண்டாம் வகுப்பு மாணவர்களுக்கான இரண்டாம் கட்ட திருப்புதல் தேர்வு விடைத்தாள்களை அந்தந்த பள்ளிகளே மதிப்பீடு செய்து கொள்ளலாம் என தேர்வுத்துறை அறிவித்துள்ளது.
பத்து மற்றும் பன்னிரண்டாம் வகுப்பு மாணவர்களுக்கான இரண்டாம் கட்ட திருப்புதல் தேர்வு விடைத்தாள்களை அந்தந்த பள்ளிகளே மதிப்பீடு செய்து கொள்ளலாம் என தேர்வுத்துறை அறிவித்துள்ளது. தமிழகத்தில் கடந்த பிப்ரவரி 1 ஆம் தேதி முதல் கொரோனா தடுப்பு நடவடிக்கைகளை பின்பற்றி ஒன்றாம் வகுப்பு முதல் 12 ஆம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு பள்ளிகள் திறக்கப்பட்டு வகுப்புகள் நடத்தப்பட்டு வருகிறது. ஓமைக்ரான் காரணமாக 10 மற்றும் 12 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு கடந்த ஜனவரி மாதம் நடைபெற இருந்த திருப்புதல் தேர்வு பிப்ரவரி மாதத்திற்கு ஒத்தி வைக்கப்பட்டு நடத்தப்பட்டது. பொதுத் தேர்வு எழுதவுள்ள 10 மற்றும் 12 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு திருப்புதல் தேர்வு நடத்த பள்ளிக்கல்வித்துறை திட்டமிட்டது.

அதன்படி, கடந்த பிப்ரவரி மாதம் முதற்கட்ட திருப்புதல் தேர்வு நடந்து முடிந்தது. இதில் 10 மற்றும் 12 ஆம் வகுப்பு தேர்வுக்கான வினாத்தாள்கள் முன்கூட்டியே வெளியான சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இது தொடர்பாக கல்வித்துறையை சேர்ந்த மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டதோடு, தனியார் பள்ளி நிர்வாகிகள் சிலர் மீது போலீசில் புகார் கொடுக்கப்பட்டு, வழக்குப்பதிவு செய்யப்பட்டு இருக்கிறது. இந்நிலையில் 10 மற்றும் 12 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு இரண்டாம் கட்ட திருப்புதல் தேர்வு வரும் 28 ஆம் தேதி முதல் தொடங்கி நடைபெற இருக்கிறது.

முதற்கட்ட திருப்புதல் தேர்வில் வினாத்தாள் கசிவு ஆன விவகாரம் போல், மீண்டும் எந்த சம்பவமும் நடந்துவிடக் கூடாது என்பதில் பள்ளிக்கல்வித்துறை தீவிர கவனம் செலுத்தி வருகிறது. முதற்கட்ட திருப்புதல் தேர்வு விடைத்தாள்கள் வெவ்வேறு பள்ளிகளில் மதிப்பீடு செய்யப்பட்ட நிலையில், 2 ஆம் கட்ட திருப்புதல் தேர்வு விடைத்தாள்களை அந்தந்த பள்ளிகளே மதிப்பீடு செய்து கொள்ளலாம் என தேர்வுத்துறை தெரிவித்துள்ளது. தேர்வுக்கு 2 வகையான வினாத்தாள்கள் பயன்படுத்தப்பட உள்ளது. தேர்வு நடைபெறுவதற்கு 2 மணி நேரத்துக்கு முன்னரே எந்த வினாத்தாளை பயன்படுத்தலாம் என்பது குறித்து பள்ளிகளுக்கு தகவல் தெரிவிக்கப்படும் என குறிப்பிடப்பட்டுள்ளது. வினாத்தாள் லீக் ஆனால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் தேர்வுத்துறை எச்சரிக்கை விடுத்துள்ளது.
