மாணவனிடம் சாதிய ரீதியாக பேசிய ஆசிரியர்.. சர்ச்சைக்குள்ளான ஆடியோ.. பள்ளிக்கு போலீஸ் பாதுகாப்பு..
அரசுப்பள்ளி ஆசிரியர் மாணவனிடம் சாதிய ரீதியாக பேசியதாக கூறப்படும் ஆடியோ, சமூக வலைதளங்களில் வைரலானதை அடுத்து, சம்பந்தப்பட்ட ஆசிரியரிடம் மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் விசாரணை நடத்தினார்.
தூத்துக்குடி மாவட்டம் குளத்தூரில் இயக்கி வரும் அரசு மேல்நிலைப் பள்ளியில் பெற்றோர் ஆசிரியர் சங்க தேர்தல் நடைபெறவுள்ளது. இந்தா தேர்தலானது கடந்த ஏப்ரல் மாதம் இறுதியில் நடப்பதாக அறிவிக்கப்பட்டிருந்த நிலையில், பொது தேர்வு காரணமாக தள்ளி வைக்கப்பட்டது. இதனிடையே கடந்த ஜூன் 7-ஆம் தேதி தேர்தல் நடப்பதாக அறிவிக்கப்பட்டு மீண்டும் ஒத்திவைக்கப்பட்டதாக கூறப்படுகிறது.
இதற்கிடையே அப்பள்ளியில் பணியாற்றும் ஆசிரியர் ஒருவர், மாணவனிடம் செல்போனில் பெற்றோர் ஆசிரியர் சங்க தேர்தல் தொடர்பாக பேசும் ஆடியோ தற்போது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. அந்த ஆடியோவில், பேசும் ஆசிரியர், தற்போது பெற்றோர்- ஆசிரியர் சங்க தேர்தல் நடைபெறவுள்ளது. எனவே, இங்குள்ள சிலர் குறிப்பிட்ட சமுதாயத்தை சேர்ந்தவரை தலைவராக கொண்டு வர முயற்சிக்கின்றனர். அதனால் உங்கள் ஊரில் உள்ளவர்களை தேர்தலில் போட்டியிட சொல்ல வேண்டும் என்று அவர் கூறுகிறார்.
மேலும் படிக்க:மிரட்டும் கொரோனா.. சென்னையில் திடீர் அதிகரிப்பு.. மீண்டும் அமலுக்கு வந்த கட்டுப்பாடுகள்..
மேலும் உங்கள் ஊரைச் சேர்ந்த மாணவர்களை இந்தப் பள்ளியில் சேர்க்க வேண்டாம் என்றும் கூறும் அந்த ஆசிரியர், ஒரு சமூகத்தின் கையில் அரசு பள்ளி சென்று விடக்கூடாது. அனைத்து தரப்பு மாணவர்களும் இங்கு வந்து பயில வேண்டும் என்று தெரிவிக்கிறார். சாதி ரீதியாக அந்த மாணவனிடம் பேசும் அந்த ஆசிரியரிடம் அந்த மாணவர், “அனைவரும் சமம் தானே” எனவும் குறிப்பிடுகிறார்.
இந்த ஆடியோ நேற்று இரவு முதல் சமூக வலைதளங்களில் வேகமாக பரவி வருகிறது. இந்நிலையில், ஆடியோ தொடர்பாக சம்பந்தப்பட்ட பள்ளி ஆசிரியரிடம் மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் விசாரணை நடத்தி வருகிறார். இச்சம்பவத்தை தொடர்ந்து சாதி மோதம் அசம்பாவிதங்கள் ஏற்படாமல் தடுக்க சம்பந்தப்பட்ட பள்ளியில் காவல்துறையினர் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.
மேலும் படிக்க:கோவில்களில் மாற்றுத்திறனாளிகள் திருமணம்.. புத்தாடை வழங்க தமிழ்நாடு அரசு உத்தரவு