கோவில்களில் மாற்றுத்திறனாளிகள் திருமணம்.. புத்தாடை வழங்க தமிழ்நாடு அரசு உத்தரவு
திருக்கோவில்களில் திருமணம் செய்யும் மாற்றுத்திறனாளி மணமக்களுக்கு புத்தாடைகள் திருக்கோயில் சார்பாக வழங்க தமிழ்நாடு அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது. இதனிடையே மணமக்களில் ஒருவர் மாற்றுத்திறனாளியாக இருப்பின் கட்டணம் ஏதுமின்றி திருக்கோயில் மண்டபங்களில் திருமணங்கள் நடத்திட அனுமதிக்கப்பட்டு வருகிறது.
கடந்த சட்டமற்ற கூட்டத்தொடரில் பேசிய இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் சேகர் பாபு, மணமக்களில் ஒருவர் மாற்றுத்திறனாளியாக இருப்பின் திருக்கோயிலில் அவர்களுக்கு நடைபெறும் திருமணத்திற்கான கட்டணம் வசூலிக்கப்படமாட்டாது என்று அறிவித்தார். மேலும் திருக்கோயிலுக்கு சொந்தமான திருமண மண்டபத்தில் திருமணம் நடைபெற்றால் மண்டபத்திற்கான பராமரிப்பு கட்டணம் மட்டுமே வசூலிக்கப்படும் என்று அவர் தெரிவித்தார்.
மேலும் படிக்க: மகனுக்காக ஊரார் காலில் விழுந்து உயிரை விட்ட தந்தை.. சினிமாவை விட கொடூரமாக நடந்த நிஜ சம்பவம்..!
அதன் படி, இதற்கான உத்தரவு அனைத்து சார்நிலை அலுவலர்களுக்கும் அனுப்பப்பட்டது. தற்போது இந்துசமய அறநிலையத்துறையின் கட்டுப்பாட்டில் உள்ள அனைத்து கோயில்களிலும் மாற்றுத்திறனாளிகளுக்கு திருமணம் நடைபெற்றால் அதற்கான கட்டணம் வசூலிக்கப்படுவதில்லை. அதே போல் திருக்கோயில்களுக்கு சொந்தமான திருமண மண்டபங்களில் மாற்றுத்திறனாளிகளுக்கு திருமணம் நடைபெற்றால் பராமரிப்பு கட்டணம் மட்டுமே வசூலிக்கப்படுகிறது.
இந்நிலையில் இத்திட்டத்தின் கீழ் நடைபெறவுள்ள திருமணங்களில் மணமக்களுக்கு புத்தாடைகள் திருக்கோயில் சார்பாக வழங்கப்படும் என்று தமிழக அரசு தற்போது உத்தரவிட்டுள்ளது. அதன் படி, இந்து சமய அறநிலையத்துறையின் கட்டுப்பாட்டில் உள்ள கோவில் மற்றும் திருமண மண்டபங்களில் நடைபெறும் திருமணங்களில் மணமக்களுக்கு இனி புத்தாடைகள் திருக்கோயில் சார்பாக வழங்கப்படும் என்றும் தமிழக அரசு தெரிவித்துள்ளது.
மேலும் படிக்க: மிரட்டும் கொரோனா.. சென்னையில் திடீர் அதிகரிப்பு.. மீண்டும் அமலுக்கு வந்த கட்டுப்பாடுகள்..