Salem factory the 3rd day of protest against the privatization of the state of the child struggle with the Cubs

சூரமங்கலம்

சேலம் உருக்காலையை தனியார் மயமாக்கும் மத்திய அரசைக் கண்டித்து மூன்றாவது நாளாக பிள்ளைக் குட்டிகளுடன் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர் உருக்காலைத் தொழிலாளர்கள்.

சேலம் உருக்காலையில் 1000-க்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் பணியாற்றுகின்றனர். இந்த ஆலையை தனியார் மயமாக்கும் முயற்சியில் மத்திய அரசு ஈடுபட்டுள்ளது.

இதனிடையே, சேலம் உருக்காலையை வாங்க விரும்புவோர் டெண்டர் கோரலாம் என்ற அறிவிப்பை கடந்த மாதம் 27–ஆம் தேதி மத்திய செயில் நிறுவனம் வெளியிட்டுள்ளது.

உருக்காலையை தனியார் மயமாக்கலுக்கு எதிர்ப்பு தெரிவித்தும், டெண்டர் அறிவிப்பை கண்டித்தும் கடந்த 3–ஆம் தேதி முதல் உருக்காலை தொழிலாளர்கள் காலவரையற்ற போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

இந்தப் போராட்டத்தில் ஈடுபட்ட தொழிலாளர்களுக்கு அங்கேயே உணவு சமைத்து வழங்கப்பட்டு வருகிறது.

தொழிலாளர்களின் இந்தப் போராட்டம் நேற்று 3–வது நாளாக நீடித்தது. அவர்களின் குடும்பத்தினரும் இந்த போராட்டத்தில் கலந்து கொண்டனர். நேற்று பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை என்பதால் தொழிலாளர்களின் குழந்தைகளும் இந்தப் போராட்டத்தில் கலந்து கொண்டனர்.

‘மத்திய அரசே சேலம் உருக்காலையை தனியார் மயமாக்குவதை உடனடியாக கைவிட வேண்டும்’ என்பன உள்ளிட்ட வாசகங்கள் அடங்கிய பதாகைகளை கைகளில் வைத்திருந்தனர்.

இதுகுறித்து போராட்டத்தில் ஈடுபட்டுள்ள உருக்காலை தொழிலாளர்கள் கூறியது:

“உருக்காலையை தனியார் மயமாக்கும் முயற்சியை மத்திய அரசு கைவிடும் வரை எங்களுடைய போராட்டம் தொடரும். உருக்காலை நிர்வாகத்தினர் எங்களுடன் பேச்சுவார்த்தை நடத்தினர். அப்போது இதுதொடர்பாக நாங்கள் எந்த உறுதியும் அளிக்க முடியாது என்று கூறிவிட்டனர்.

மேலும் எங்களுடைய கோரிக்கைகளை மத்திய அரசுக்கு தெரியப்படுத்துகிறோம் என்றும், பணிக்கு திரும்புங்கள் என்றும் கூறினர். ஆனால் இதை ஏற்க மறுத்து தொடர்ந்து போராட்டம் நடத்தி வருகிறோம்.

உருக்காலையை தனியார் மயமாக்கும் முயற்சிக்கு எதிர்ப்பு தெரிவித்து தமிழக அரசு குரல் கொடுக்க வேண்டும். எங்களுடைய போராட்டத்தால் உருக்காலையில் இரும்பு உற்பத்தி பாதிக்கப்பட்டுள்ளது” என்று அவர்கள் கூறியுள்ளனர்.