வைகை ஆற்றில் திருட்டுத்தனமாக மணல் அள்ளிய அறுவர் கைது…
மதுரை
வைகை ஆற்றில் அனுமதியின்றி திருட்டுத்தனமாக மணல் அள்ளிய 6 பேரை காவலாளர்கள் வழக்குபதிவு செய்து கைது செய்தனர்.
மதுரை மாவட்டம், மேலக்கால் வைகை ஆற்றுப் பகுதியில் காடுபட்டி காவல் நிலைய காவலாளர்கள் சுற்றுப் பணியில் ஈடுபட்டிருந்தனர். இவர்களுக்கு உதவி ஆய்வாளர் கெலிஸ்டஸ் ராஜ்குமார் தலைமை தாங்கினார்.
அப்போது லாரிகள் மூலம் அனுமதியின்றி திருட்டுத்தனமாக ஒரு கும்பல் மணல் அள்ளிக் கொண்டு இருந்தனர். அந்த கும்பல் காவலாளர்கள் வருவதைப் பார்த்ததும் ஆற்றில் வளர்ந்து இருந்த நாணலுக்குள் மறைந்து தப்பி ஓடிவிட்டனர்.
இதனையடுத்து மணல் அள்ள பயன்படுத்திய இரண்டு லாரிகளையும் காவலாளர்கள் பறிமுதல் செய்தனர். பின்னர் விசாரணையும் மேற்கொண்டனர்.
இதில் லாரி ஓட்டுநர்கள் தேங்கில்பட்டியைச் சேர்ந்த பிரபு, அனுமந்தன்பட்டியைச் சேர்ந்த துரைப்பாண்டி மற்றும் மூர்த்தி, நாகன், காந்தி, மற்றொரு பிரபு ஆகியோரே மணல் அள்ளினர் என்பது தெரிய வந்தது.
இதனையடுத்து ஆறு பேரையும் கிள்ளிமங்கலம் பகுதியில் காவலாளர்கள் பிடித்து வழக்குபதிவு செய்தனர். அவர்களை கைதும் செய்தனர்.