"என் உயிருக்கு ஆபத்து" - சகாயம் ஐஏஎஸ் உயர்நீதிமன்றத்தில் பரபரப்பு புகார்!!
ஐஏஎஸ் அதிகாரி சகாயத்துக்கு கொலை மிரட்டல் விடுக்கப்பட்டுள்ளதாக, சென்னை உயர்நீதிமன்றத்தில் அவர் புகார் தெரிவித்துள்ளார்.
சென்னை உயர் நீதிமன்ற உத்தரவின் பேரில் மதுரை மாவட்டத்தில் நடைபெற்றுள்ள கிரானைட் முறைகேடுகளை ஆய்வு செய்யும் முதற்கட்ட பணிகளை ஐஏஎஸ் அதிகாரி சகாயம் தொடங்கினார். இதற்கான தனி குழு அமைக்கப்பட்டது.
இதைதொடர்ந்து அதிகாரி சகாயம், மதுரையில் நடந்த கிரானைட் முறைகேட்டை வெளிச்சத்துக்கு கொண்டு வந்தார். இதனால், மதுரை கலெக்டராக இருந்த அவரை, தமிழக அரசு பணியிட மாற்றம் செய்தது. பின்னர், அவர் அறிவியல் நகரத்தின் துணைத் தலைவராக நியமிக்கப்பட்டார்.
இதில் கிரானைட் முறைகேடுகளை கண்டறிந்த அவர், அதற்கான அறிக்கையை உயர்நீதிமன்றத்தில் தாக்கல் செய்தார். அதில், மத்திய மற்றும் மாநில அரசு அதிகாரிகளுக்கு அதிகளவில் தொடர்பு இருப்பதாக தெரிவித்தார்.
இதனால், அதிகாரி சகாயம் தலைமையிலான குழுவை கலைக்க வேண்டும் என நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. இந்த வழக்கை விசாரித்த நீதிமன்றம், அதிகாரி சகாயத்தின் தனிக்குழுவை கடந்த ஜூலை 31ம் தேதிக்குள் கலைக்க உத்தரவிட்டது. அதன்படி அந்த குழுவும் கலைக்கப்பட்டது.
இந்நிலையில், ஐஏஎஸ் அதிகாரி சகாயம், இன்று சென்னை உயர்நீதிமன்றம் சென்றார். அங்கு தனது உயிருக்கு ஆபத்து இருப்பதாக அவர் புகார் அளித்தார். இதைதொடர்ந்து, தன்னுடன் கிரானைட் முறைகேடு விவகாரத்தில் ஆய்வு நடத்திய சேவற்கொடியோனுக்கும் பாதுகாப்பு அளிக்க வேண்டும் என அவர் கோரிக்கை விடுத்தார்.
மேலும், தன்னுடன் கிரானை முறைகேடு பற்றி விசாரணை நடத்தி வந்த பார்த்தசாரதி என்பவர் விபத்தில் மரணம் அடைந்தார். அவரது மறைவில் சந்தேகம் உள்ளது. எனவே, இதுபற்றியும் விசாரிக்க உத்தரவிட வேண்டும் என அதிகாரி சகாயம் கேட்டு கொண்டார்.
இந்த மனு மீதான விசாரணை எப்போது தொடங்கும் என்பது இதுவரை தெரியவில்லை. அதனை நீதிபதிகள் ஏற்று, உரிய விசாரணை நடத்த உத்தரவிடுவார்கள் என சமூக ஆர்வலர்கள் எதிர் பார்க்கின்றனர்.