நிலக்கரி இறக்குமதியில் ரூ.487 கோடிக்கு முறைகேடு நடைபெற்றதாக பிரபல தொழிலதிபர் அகமது புகாரி நிறுவனத்திற்கு எதிராக அமலாக்கத்துறை தொடர்ந்த அனைத்தது வழக்குகளும் ரத்து செய்து சென்னை சிபிஐ சிறப்பு நீதிமன்றம் தீர்ப்பு வழங்கி உள்ளது.

கடந்த 2011-12 மற்றும் 2014-15 ஆகிய ஆண்டுகளுக்கு இடையே இந்தோனேசியாவில் இருந்து தரம் குறைந்த நிலக்கரியை இறக்குமதி செய்ததன் மூலம் அரசுக்கு 487 கோடி ரூபாய் இழப்பு ஏற்படுத்தியதாக கோஸ்டல் எனர்ஜி என்ற தனியார் நிறுவனத்தின் இயக்குநரான அகமது ஏ.ஆர். புகாரி, அந்த நிறுவனம், கோஸ்டல் எனர்ஜென், துபாயில் உள்ள நிலக்கரி மற்றும் எண்ணெய் நிறுவனங்கள், மொரீஷியாசில் உள்ள முத்தியாரா எனர்ஜி ஹோல்டிங்ஸ், பிரிசியஸ் எனர்ஜி ஹோல்டிங் என்ற அயல்நாட்டு நிறுவனம் ஆகிய நிறுவனங்களுக்கு எதிராக கடந்த 2018 ம் ஆண்டு சிபிஐ வழக்குப்பதிவு செய்தது. இந்த மோசடி பணத்தை வெளிநாடுகளுக்கு சட்டவிரோதமாகப் பரிமாற்றம் செய்த குற்றத்திற்காக, மத்திய அமலாக்கத்துறையினரால் (ED) மார்ச் 2022-ல் கைது செய்யப்பட்டார்.

Add Asianetnews Tamil as a Preferred SourcegooglePreferred

தொடர்ந்து சிபிஐ பதிவு செய்த இந்த வழக்கின் அடிப்படையில் சட்டவிரோத பணப்பரிமாற்ற தடைச் சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்த அமலாக்கத் துறை சென்னை சிபிஐ சிறப்பு நீதிமன்றத்தில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்தது. இந்தநிலையில் அகமது புகாரிக்கு எதிராக சிபிஐ பதிவு செய்திருந்த வழக்கில் தரமற்ற நிலக்கரி இறக்குமதி செய்ததற்கான எந்த ஆதாரங்களும் இல்லை, எந்த ஒரு முடிவுக்கு வர முடியவில்லை என சிபிஐ தாக்கல் செய்த அறிக்கையின் அடிப்படையில் டெல்லி உயர் நீதிமன்றம் கடந்த 2025ஆம் ஆண்டு தொழிலதிபர் வி ஆர் புகாரிக்கு எதிரான வழக்கை ரத்து செய்து உத்தரவிட்டிருந்தது.

அதனடிப்படையில், அகமது புகாரி மற்றும் 2 நிறுவனங்களுக்கு எதிரான அமலாக்கத் துறை வழக்கை ரத்து செய்து சென்னை உயர் நீதிமன்றம் அண்மையில் உத்தரவு பிறப்பித்திருந்தது.

இந்த சூழலில், 4 நிறுவனங்களுக்கு எதிரான அமலாக்கத் துறை வழக்கை விசாரித்த நீதிபதி ஜெ. ஓம் பிரகாஷ், இந்த முறைகேடு தொடர்பாக சிபிஐ பதிவு செய்த வழக்கை டெல்லி உயர் நீதிமன்றமும், அமலாக்கத் துறை வழக்கை சென்னை உயர் நீதிமன்றமும் ரத்து செய்துள்ளதால், இந்த நான்கு நிறுவனங்களுக்கு எதிரான அமலாக்கத் துறை வழக்கை ரத்து செய்வதாக தீர்ப்பளித்துள்ளார்.