CBI Arrest : நீட் வினாத்தாள் கசிவு வழக்கில் முக்கிய குற்றவாளி கைது.. சிபிஐ அதிரடி
நீட் வினாத்தாள் கசிவு வழக்கில் முக்கிய சூத்திரதாரியாகக் கருதப்படும் வேதியியல் ஆசிரியரை சிபிஐ புனேவில் கைது செய்துள்ளது. இந்த கைது, நாடு தழுவிய மோசடி வலையமைப்பை வெளிச்சம் போட்டுக் காட்டியுள்ளது.

நீட் வினாத்தாள் கசிவு வழக்கில் புதிய திருப்பம்
நீட் வினாத்தாள் கசிவு வழக்கில் முக்கிய திருப்பமாக, இந்த மோசடியின் முக்கிய சூத்திரதாரி எனக் கூறப்படும் ஒருவரை கைது செய்துள்ளது சிபிஐ. மகாராஷ்டிராவின் லத்தூர் பகுதியைச் சேர்ந்த வேதியியல் ஆசிரியர் பி.வி. குல்கர்ணி என்பவரை புனேவில் வைத்து சிபிஐ அதிகாரிகள் பிடித்துள்ளனர். நீட் தேர்வு நடைமுறைகள் குறித்து அவருக்கு இருந்த தொடர்புகளை பயன்படுத்தி, வினாத்தாள் தகவல்களை வெளியிட்டதாக விசாரணையில் தெரியவந்துள்ளது. இந்த கைது, நாடு முழுவதும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
சிபிஐ விசாரணையின் படி, கடந்த ஏப்ரல் மாத இறுதியில் புனேவில் உள்ள தனது வீட்டில் குல்கர்ணி சில மாணவர்களுக்கு ரகசிய பயிற்சி வகுப்புகளை நடத்தியுள்ளார். இந்த செயலுக்கு மனிஷா வாக்மரே என்ற மற்றொரு குற்றவாளி உதவியதாக கூறப்படுகிறது. பயிற்சியின்போது, தேர்வில் வரக்கூடிய கேள்விகள், அதற்கான பதில் தேர்வுகள் மற்றும் சரியான விடைகளை மாணவர்களுக்கு முன்கூட்டியே சொல்லியதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். மாணவர்கள் அவற்றை தங்கள் நோட்டுகளில் எழுதி வைத்திருந்ததும் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

சிபிஐ விசாரணையில் அதிர்ச்சி தகவல்கள்
இந்த குறிப்புகளை சிபிஐ அதிகாரிகள் ஆய்வு செய்தபோது, அவை அசல் நீட் வினாத்தாளுடன் மிகத் துல்லியமாக பொருந்தியதாக உறுதி செய்யப்பட்டுள்ளது. நாடு முழுவதும் பல இடங்களில் நடத்தப்பட்ட சோதனைகளில் கைப்பற்றப்பட்ட மொபைல் போன்கள், லேப்டாப்புகள் உள்ளிட்ட எலக்ட்ரானிக் சாதனங்களும் தற்போது தடயவியல் பரிசோதனைக்கு அனுப்பப்பட்டுள்ளன. மத்திய கல்வி அமைச்சகத்தின் புகாரின் அடிப்படையில், மே 12 அன்று சிபிஐ வழக்குப் பதிவு செய்து, தனிப்பட்ட விசாரணைக் குழுவை அமைத்தது குறிப்பிடத்தக்கது.
இந்த வழக்கில் ஏற்கனவே ஜெய்ப்பூர், குருகிராம், நாசிக் மற்றும் புனே உள்ளிட்ட பகுதிகளில் இருந்து ஏழு பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். அவர்களில் ஐந்து பேர் சிபிஐ காவலில் விசாரிக்கப்பட்டு வருகின்றனர். இதற்கிடையில், வினாத்தாள் கசிவு சர்ச்சையால் ரத்து செய்யப்பட்ட நீட் UG தேர்வு, ஜூன் 21 அன்று மீண்டும் நடத்தப்பட உள்ளது. சுமார் 22 லட்சத்திற்கும் அதிகமான மாணவர்கள் எழுதிய இந்த தேர்வு ரத்து செய்யப்பட்டிருப்பது, நீட் தேர்வு வரலாற்றில் முதல் முறையாகும். இந்த சர்ச்சைக்குப் பிறகு, அடுத்த ஆண்டு முதல் நீட் தேர்வை ஆன்லைன் முறையில் நடத்த மத்திய அரசு திட்டமிட்டுள்ளது.

