Rs 12 lakh abuse in rural employment scheme Officers are complicit People in peak anger ...
விழுப்புரம்
தேசிய ஊரக வேலைவாய்ப்பு உறுதியளிப்புத் திட்டத்தில் ரூ.12 இலட்சம் முறைகேடு நடந்துள்ளது என்றும் அதற்கு உடந்தையாக இருந்த அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் உச்சக்கட்ட கோபத்தில் இருந்த மக்கள் ஊராட்சி அலுவலகத்திற்கு மக்கள் பூட்டுப் போட்டு போராட்டம் நடத்தினர்.
விழுப்புரம் மாவட்டம், திருவெண்ணெய்நல்லூர் ஒன்றியம், எரளூர் ஊராட்சி மன்ற அலுவலகத்தில், தேசிய ஊரக வேலை உறுதியளிப்புத் திட்ட சமூக தணிக்கை ஆய்வுக் கூட்டம் நடைப்பெற்றது.
இத்திட்டம் குறித்து பற்றாளரும், துணை வட்டார வளர்ச்சி அலுவலருமான குணமணி, ஒன்றிய பணி மேற்பார்வையாளர் குமார் மற்றும் அதிகாரிகள் கொண்ட குழுவினர் தணிக்கையை மேற்கொண்டனர்.
அப்போது, இத்திட்டத்தின் கீழ் 2015-16, 2016-17 ஆகிய ஆண்டுகளில் நடைப்பெற்ற வேலைகளில் இறந்தவர்களின் பெயரிலும், வெளியூரில் தங்கி வசிப்பவர்களின் பெயர்களிலும், ஒரே குடும்பத்தில் உள்ள நபர்களின் பெயர்களிலும் வேலைகள் செய்ததாகக் கூறி ரூ.12 இலட்சம் மதிப்பில் முறைகேடு நடந்திருப்பது கண்டிபிடிக்கப்பட்டது.
மேலும், இந்த முறைகேட்டிற்கு உடந்தையாக ஊராட்சிச் செயலர், அதிகாரிகள் இருந்துள்ளனர் என்பது தெரியவந்தது.
எனவே, முறைகேட்டில் ஈடுபட்டவர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று இத்திட்டத்தில் பணிபுரியும் மக்கள் தரையில் அமர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது, அதிகாரிகளுக்கும் இவர்களுக்கும் இடையே வாக்குவாதமும் ஏற்பட்டது.
பின்னர், ஆவேசமடைந்த அவர்கள், அதிகாரிகளை வெளியே அனுப்பி ஊராட்சி அலுவலகத்திற்கு அதிரடியாக பூட்டுப் போட்டனர்.
அதிகாரிகளும் தங்கள் பங்கிற்கு மேலும் ஒரு பூட்டுப்போட்டு பூட்டிவிட்டு, மேல் அதிகாரிகள் வரும் வரை யாரும் அலுவலகத்தைத் திறக்கக் கூடாது என கூறிவிட்டு அங்கிருந்துச் சென்றுவிட்டனர்.
இப்படி மக்களும், அதிகாரிகளும் இரட்டைப் பூட்டு போட்டுவிட்டுச் சென்ற சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
