அரசுப் பள்ளி மாணவிகளுக்கு ரூ.1000 உதவித் தொகை.. வெளியான புது அப்டேட்.. விரைவில் அறிமுகம்..
அரசுப் பள்ளி மாணவிகள் மாதம்தோறும் ரூ.1,000 உதவித் தொகைபெறும் திட்டத்துக்கு விண்ணப்பிக்க பிரத்யேக இணையதளம், செல்போன் செயலி உருவாக்கும் பணி முழு வீச்சில் நடைப்பெற்று வருவதாக சமூக நலத்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
தமிழக அரசின் மூவலூர் ராமாமிர்தம் அம்மையார் நினைவு திருமண நிதியுதவி திட்டமானது உயர்கல்வி ஊக்கத்தொகை திட்டமாக மாற்றப்பட்டுள்ளது. அதன்படி, அரசு பள்ளிகளில் 6 ஆம் வகுப்பு முதல் 12 ஆம் வகுப்பு வரை படித்த மாணவிகளுக்கு
கல்லூரி, பாலிடெக்னிக் அல்லது ஐடிஐயில் சேர்ந்து படிக்கும்போது மாதம் தோறும் ரூ.1,000 வழங்கப்படும்.
இத்திட்டமானது வரும் கல்வியாண்டு முதல் அமலுக்கு வரவுள்ளது. இத்திட்டத்தின் கீழ் 6 லட்சம் மாணவிகள் பயனடைவார்கள் என்று கணக்கிடப்பட்டுள்ளது. வரும் ஜூலை 15 ஆம் தேதி காமராஜர் பிறந்த நாளில் தொடங்கப்படவுள்ளது. இதனால் பயனாளிகளை இறுதிசெய்வதற்காக, மேற்படிப்பு படிக்கும் மாணவிகளின் பட்டியல் தயாரிக்கும் பணிகள் நடைபெற்று வருகிறது. இதற்கிடையே, இத்திட்டத்தில் சேர்ந்து பயன்பெற தகுதிபெற்ற மாணவிகள் ஆன்லைனிலேயே விண்ணப்பிக்க வசதியாக இணையதளம், செல்போன் செயலி உருவாக்கும் பணிகளும் நடைபெற்று வருவதாகவும் விரைவில் அறிமுகப்படுத்தவுள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.
இதுகுறித்து சமூகநலத் துறை அதிகாரிகள் , அரசுப் பள்ளியில் படித்த மாணவிகளின் விவரங்களை பள்ளிக்கல்வித் துறையிடம் பெறப்பட்டுவிட்டதாகவும் உயர்கல்வித் துறையை பொறுத்தவரை கல்லூரிகளில் தனித்தனியாக விவரங்கள் பராமரிக்கப்படுவதால், மாணவிகளின் விவரங்களை விரைவாக பெறுவதில் சிக்கல் உள்ளது என்று கூறுகின்றனர். இருப்பினும், உயர்கல்வித் துறை மூலமாக மாணவிகளின் விவரங்களை சேகரிக்கும் பணிகளை விரைவுபடுத்தியுள்ளதாக கூறும் அதிகாரிகள், இத்திட்டத்தில் பயன்பெற, மாணவிகள் விண்ணப்பிக்க தனி இணையதளம், செல்போன் செயலியை தமிழக அரசு உருவாக்கி வருகிறது என்றனர்.
இத்திட்டத்தை செயல்படுத்த முதற்கட்டமாக தமிழக அரசு சார்பில் ரூ.760 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது. மாணவிகள் எண்ணிக்கை அதிகரிக்கும் பட்சத்தில், அரசிடமிருந்து கூடுதல் நிதி பெறவும் தயாராக இருப்பதாகவும் அதே போல், வேறு ஏதாவது பிற உதவித் தொகைகளை மாணவிகள் பெற்று வந்தாலும், இத்திட்டத்திற்கு விண்ணப்பிக்கலாம் என்றும் அதிகாரிகள் தெரிவித்தனர்.இதுதவிர, இந்த திட்டம் வரும் ஜூலை 15 ஆம் தேதி காமராஜர் பிறந்த நாளில் தொடங்கப்படவுள்ளதாகவும் மாணவிகள் நேரடியாக அந்தந்த கல்லூரிகளில் விண்ணப்பங்களை பெற்று விண்ணப்பிக்கும் வசதியும் ஏற்படுத்தப்படும் என்று தகவல் தெரிவிக்கின்றனர்.
மேலும் படிக்க: Powercut In Chennai: சென்னையில் இன்று எங்கெல்லாம் மின்தடை தெரியுமா? இதோ மொத்த லிஸ்ட்.!