"படப்பிடிப்புகள் முடங்கியதற்கு காரணமே தயாரிப்பாளர்கள்தான்" - ஆர்.கே.செல்வமணி குற்றச்சாட்டு!!
படப்பிடிப்புகள் முடங்கியதற்கு தொழிலாளர்கள் காரணமல்ல என்றும், தயாரிப்பாளர்கள்தான் காரணம் என்றும் இயக்குநர் செல்வமணி குற்றம் சாட்டியுள்ளார்.
பெப்சி தொழிலாளர்களுக்கும் தயாரிப்பாளர் சங்கத்துக்கும் ஏற்பட்ட பிரச்சனை காரணமாக இன்று முதல் வேலை நிறுத்தப் போராட்டத்தல் ஈடுபடுவதாக அறிவிக்கப்பட்டது. பெப்சி தொழிலாளர்களின் சம்பள பிரச்சனை காரணாக இந்த வேலை நிறுத்தப் போராட்டம் அறிவிக்கப்பட்டது. அதன்படி, இன்று முதல் பெப்சி தொழிலாளர்கள் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
ஆனால், தயாரிப்பாளர் சங்க தலைவர் விஷால், பெப்சி தொழிலாளர்கள் இல்லை என்றாலும் வேறு சில தனிப்பட்ட தொழிலாளர்களை வைத்து படப்பிடிப்பு நடத்திக்கொள்வோம் என்று கூறியிருந்தார்.
அது மட்டுமல்லாது, தமிழ் திரைப்ட தயாரிப்பாளர்கள் சங்கத்துக்கும், பெப்சி அமைப்புக்கும் இடையிலான ஒப்பந்தம் ரத்து எனவும் கூறியிருந்தார்.
பெப்சி தொழிலாளர்களின் வேலை நிறுத்தம் காரணமாக காலா, மெர்சல் உள்ளிட்ட படப்பிடிப்பு ரத்து செய்யப்பட்டுள்ளது.
இந்த நிலையில், இயக்குநர் செல்வமணி இன்று சென்னை, வடபழனியில் செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது பேசிய அவர், சம்பள பிரச்சனை விவகாரத்தில் தயாரிப்பாளர் சங்கம்தான் முடிவெடுக்க வேண்டும் என்றார்.
பெப்சி மீதான குற்றச்சாட்டுகளை தயாரிப்பாளர்கள் முன் வைத்தால் பிரச்சனையைத் தீர்க்கலாம் என்று கூறினார். படப்பிடிப்புகள் முடங்கியதற்கு தொழிலாளர்கள் காரணமல்ல என்றும், தயாரிப்பாளர்கள்தான் காரணம் என்றும் செல்வமணி குற்றம் சாட்டினார்.
தயாரிப்பாளர் தாணு கையெழுத்திட்ட ஊதிய ஒப்பந்தத்தை ரத்து செய்ததே பிரச்சனைக்கு காரணம் என்றும் செல்வமணி கூறியுள்ளார்.