தேனியில் 11 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி வருவாய் துறை அலுவலர்கள் போராட்டம்...
தேனி
தேனியில் 11 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழ்நாடு வருவாய் துறை அலுவலர்கள் சங்கத்தினர் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
தேனி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் 11 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழ்நாடு வருவாய் துறை அலுவலர்கள் சங்கத்தினர் நேற்று போராட்டத்தில் ஈடுபட்டனர்.
இந்தப் போராட்டத்திற்கு சங்கத்தின் மாவட்ட துணைத் தலைவர் ராஜவேலு தலைமை தாங்கினார்.
இந்தப் போராட்டத்தில் "தமிழக வருவாய் துறையில் காலிப் பணியிடங்களை நிரப்ப வேண்டும்,
மேம்படுத்தப்பட்ட ஊதியம் வழங்க வேண்டும்,
புதிய ஓய்வூதியத் திட்டத்தை கைவிட வேண்டும்,
பேரிடர் மேலாண்மை மற்றும் தேர்தல் பிரிவுக்கு துணை வட்டாட்சியரை நியமிக்க வேண்டும்,
சமூக பாதுகாப்புத் திட்டம் மற்றும் குடிமைப் பொருள் பிரிவில் கணினி இயக்குபவர்கள் பணியிடங்களை உருவாக்கி நிரப்ப வேண்டும்,
துணை வட்டாட்சியர் பணிக்கு நேரடி பணி நியமனம் கூடாது" உள்ளிட்ட 11 அம்ச கோரிக்கைகள் வலியுறுத்தப்பட்டன.
இந்தப் போராட்டத்தில் சங்கத்தின் மாவட்ட இணை செயலாளர் பத்மாவதி, மாவட்ட துணைத் தலைவர் மகாராஜா ஆகியோர் வாழ்த்துரை வழங்கினர்.
இதில் அனைத்து துறை வருவாய் அலுவலர்கள் பங்கேற்றனர். போராட்டத்தின் இறுதியில் வட்டப் பொருளாளர் செந்தில்குமார் நன்றித் தெரிவித்தார்.