வருவாய் உதவி ஆய்வாளர் வீட்டில் கொள்ளை; 40 சவரன் நகைள் மற்றும்ம் வெள்ளிப் பொருட்கள் அபேஸ்...
விழுப்புரம்
விழுப்புரத்தில் வருவாய் உதவி ஆய்வாளர் வீட்டில் 40 சவரன் நகைகள் மற்றும் வெள்ளிப் பொருட்களை கொள்ளையடித்து சென்ற மர்மநபர்களை காவலாளர்கள் வலைவீசி தேடி வருகின்றனர்.
விழுப்புரம் மாவட்டம், திண்டிவனம் வகாப் நகரைச் சேர்ந்தவர் அனந்தகுமார். இவர் திண்டிவனம் தாலுகா அலுவலகத்தில் வருவாய் உதவி ஆய்வாளராக பணியாற்றி வருகிறார். இவருடைய மனைவி சாந்தி (54). இவர் கிளியனூர் அரசு பள்ளியில் தலைமை ஆசிரியையாக பணியாற்றி வருகிறார்.
நேற்று காலை அனந்தகுமார் வழக்கம்போல பணிக்கு சென்றுவிட்டார் பின்னர் சாந்தி வீட்டை பூட்டிவிட்டு பள்ளிக்கூடத்துக்கு சென்றார். மதியம் சாந்தியின் வீட்டின் முன்பக்க கதவு உடைக்கப்பட்டு கிடந்தது. இதனைப் பார்த்து அதிர்ச்சி அடைந்த அப்பகுதி மக்கள் சாந்திக்கும், அனந்தகுமாருக்கும் செல்போன் மூலம் தகவல் கொடுத்தனர்.
இதனையடுத்து அவர்கள் உடனே வீட்டுக்கு வந்து பார்த்தபோது வீட்டின் ஒரு அறையில் இருந்த பீரோ உடைக்கப்பட்டு அதில் இருந்த துணிகள் அனைத்தும் சிதறி கிடந்தன. மேலும், பீரோவில் இருந்த 40 சவரன் நகைகள் மற்றும் வெள்ளிப் பொருட்களை மர்மநபர்கள் கொள்ளையடித்து சென்றது தெரிய வந்தது.
இதுகுறித்த தகவலின் பேரில் திண்டிவனம் காவல் ஆய்வாளர் சீனிபாபு, உதவி ஆய்வாளார் நந்தகுமார் மற்றும் காவலாளர்கள் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து விசாரணை நடத்தினர்.
அந்த விசாரணையில், சாந்தி, அனந்தகுமார் ஆகியோர் வீட்டை பூட்டிவிட்டு வேலைக்கு சென்றதை நோட்டமிட்ட மர்மநபர்கள், அவர்களுடைய வீட்டுக்குள் புகுந்து 40 சவரன் நகைகள் மற்றும் வெள்ளி பொருட்களை கொள்ளையடித்து கொண்டு பின்வாசல் வழியாக தப்பிச்சென்றுள்ளது தெரியவந்தது.
அதனைத் தொடர்ந்து கைரேகை நிபுணர் குமார் வரவழைக்கப்பட்டு கொள்ளைபோன வீட்டில் பதிவான தடயங்கள் சேகரிக்கப்பட்டன. கொள்ளை போன நகை மற்றும் வெள்ளி பொருட்களின் மதிப்பு ரூ.8 இலட்சம் இருக்கும்.
இதுகுறித்த புகாரின்பேரில் காவலாளார்கள் வழக்குப்பதிந்து மர்மநபர்களை வலைவீசி தேடி வருகின்றனர்.