கும்பக்கரை அருவியில் திடீர் வெள்ளப்பெருக்கு. குளித்துக் கொண்டிருந்த சுற்றுலா பயணிகள் அவசர அவசரமாக வெளியேற்றப்பட்டதால் 50க்கும் மேற்பட்டவர் அதிர்ஷ்டவசமாக உயிர்த்தப்பினர்.

கும்பக்கரை அருவியில் குவிந்த சுற்றுலா பயணிகள்

Add Asianetnews Tamil as a Preferred SourcegooglePreferred

தேனி மாவட்டம் பெரியகுளம் அருகே மேற்குத் தொடர்ச்சி மலைப்பகுதியில் அமைந்துள்ள இயற்கை எழில் கொஞ்சும் சுற்றுலாத்தலம் கும்பக்கரை அருவி. தமிழகம் மட்டுமல்லாது அண்டை மாநிலங்களிலிருந்தும் ஏராளமான சுற்றுலா பயணிகள் கும்பக்கரை அருவிக்கு வந்து குளித்து செல்கின்றனர். இந்த நிலையில் நேற்று ஞாயிறு விடுமுறையை தினத்தையொட்டி ஏராளமான சுற்றுலா பயணிகள் காலை முதல் ஆர்வத்துடன் அருவியில் குளித்து வந்தனர். இந்தநிலையில் நேற்று மாலை 4 மணியளவில் சுமார் 50க்கும் மேற்பட்ட சுற்றுலாப் பயணிகள் குளித்துக் கொண்டிருந்த நிலையில், அருவிக்கு வரும் நீர் வரத்து திடீரென அதிகரிக்க தொடங்கியுள்ளது.

திருப்பூர் அரசு மருத்துவமனையில் குழந்தை கடத்தல்... 12 மணி நேரத்தில் மீட்பு; கடத்திய பெண் கைது!!

திடீரென ஏற்பட்ட காட்டாற்று வெள்ளம்

இதனைக் கண்ட வனத்துறை காவலர்கள் உடனடியாக விசில் அடித்து குளித்துக் கொண்டிருந்த சுற்றுலாப் பயணிகளை வெளியேறுமாறு அவசரமாக எச்சரிக்கை விடுத்துள்ளனர். இதனைத் தொடர்ந்து சுற்றுலாப் பயணிகளும் சுதாரித்துக்கொண்டு வேகவேகமாக அருவியில் இருந்து வெளியேறிக் கொண்டிருந்த நிலையில்,அருவியில் திடீர் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. அதிர்ஷ்டவசமாக சுற்றுலாப் பயணிகள் அனைவரும் வெளியேற்றப்பட்டதால் பெரும் உயிர் சேதம் தவிர்க்கப்பட்டது. அருவியில் இருந்து வெளியேறிய சுற்றுலாப் பயணிகள் அருவிக்கு மேல் உள்ள பாதுகாப்பான பகுதியில் நின்று கொண்டிருந்தனர்.மேலும் அருவிக்கு எதிர் திசையில் நின்று கொண்டிருந்த சுமார் பத்துக்கும் மேற்பட்ட சுற்றுலா பயணிகளை வனத்துறையினர் பத்திரமாக மறுகரைக்கு கொண்டு வந்து சேர்த்தனர்.

பத்திரமாக மீட்ட வனத்துறை

நீர்வரத்து அதிகரித்ததைத் தொடர்ந்து உடனடியாக சுற்றுலா பயணிகள் எச்சரிக்கப்பட்டு வெளியேற்றப்பட்டதாகவும், அருவியில் 30-க்கும் மேற்பட்ட சுற்றுலாப் பயணிகள் காட்டாற்று வெள்ளத்தில் சிக்கியதாகவும், மூன்று சுற்றுலாப் பயணிகள் வெள்ளத்தில் இழுத்துச் செல்லப்பட்டு, மீட்கப்பட்டதாகவும் வெளியான செய்திகளில் உண்மை இல்லை என தேவதானப்பட்டி வனச்சரகர் டேவிட்ராஜ் தெரிவித்தார். மேலும் மறு அறிவிப்பு வரும் வரை அருவியில் சுற்றுலாப் பயணிகள் குளிக்க தடை விதிக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவித்தார்.

இதையும் படியுங்கள்

அடுத்தடுத்த பதிவெண் கொண்ட 700 பேர் தேர்ச்சி பெற்ற விவகாரம்... விளக்கம் அளித்துள்ளது டி.என்.பி.எஸ்.சி!!