உப்பள தொழிலாளர்களுக்கு ரூ.5000 நிவாரணம் திட்டம்.. முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைப்பு
உப்பு உற்பத்தி இல்லாத காலங்களில் உப்பள தொழிலாளர்களின் சிரமத்தை போக்கும் வகையில் ஆண்டுக்கு தலா 5,000 ரூபாய் நிவாரணம் வழங்கும் திட்டத்தை முதலமைச்சர் தொடங்கி வைத்தார்.
கடந்த 2021-22-ஆம் ஆண்டுக்கான சட்டப்பேரவை கூட்டத்தொடரின் போது தொழில் துறை மானியக் கோரிக்கையில், நெய்தல் உப்பு குறித்த அறிவிப்பு வெளியானது. அதன்படி அயோடின் கலந்த கல் உப்பு மற்றும் சுத்திகரிக்கப்பட்ட தூள் உப்பு ஆகியன நெய்தல் என்ற புதிய வணிகப் பெயரில் வெளிச்சந்தையில் விற்பனை செய்யப்படும் என அறிவிக்கப்பட்டது.
இந்த அறிவிப்பைத் தொடர்ந்து, நெய்தல் உப்பினை அறிமுகப்படுத்துவதற்கான பணிகள் மும்முரமாக நடைபெற்று வந்தன. இந்நிலையில் தற்போது அயோடின் கலந்த கல் உப்பு மற்றும் அயோடின் கலந்த சுத்திகரிக்கப்பட்ட தூள் உப்பு ஆகியவற்றினை நெய்தல் எனும் பெயரில் வெளிச் சந்தை விற்பனையை முதல்வர் மு.க.ஸ்டாலின் தொடக்கி வைத்துள்ளார்.
மேலும் படிக்க:11ம் வகுப்பு பொதுத்தேர்வு ரத்து? மாணவர்களுக்கு ஹாப்பி நியூஸ் சொல்லுமா பள்ளிக்கல்வித்துறை?
மேலும் உப்பு உற்பத்தி பாதிக்கப்படும் காலங்களில் உப்பளத் தொழிலாளர்களின் சிரமத்தைப் போக்க, ஆண்டுக்கு ஒருவருக்கு தலா ரூ.5,000 நிவாரணம் வழங்கப்படும் என்று சட்டப் பேரவையில் அறிவிக்கப்பட்டது. இந்த அறிவிப்பைச் செயல்படுத்தும் வகையில், உப்பு உற்பத்தி இல்லாத அக்டோபர் முதல் டிசம்பர் மாதங்கள் வரையிலான காலத்தில் ரூ.5,000 நிவாரணத் தொகை வழங்கப்பட உள்ளது. இந்தத் திட்டத்தையும் முதல்வர் மு.க.ஸ்டாலின் தொடக்கி வைத்தார்.
இந்த நிகழ்ச்சிகளில், தொழில் துறை அமைச்சர் தங்கம் தென்னரசு, தொழிலாளர் நலத் துறை அமைச்சர் சி.வி.கணேசன், தூத்துக்குடி மக்களவை உறுப்பினர் கனிமொழி, தலைமைச் செயலாளர் வெ.இறையன்பு, தொழில் துறை கூடுதல் தலைமைச் செயலாளர் எஸ்.கிருஷ்ணன், தொழிலாளர் நலத் துறை ஆணையாளர் அதுல் ஆனந்த், தமிழ்நாடு உப்பு நிறுவனத்தின் நிர்வாக இயக்குநர் கு.ராசாமணி உள்ளிட்ட பலரும் கலந்து கொண்டனர்.
மேலும் படிக்க:தொடர்ச்சியாக 3 நாட்கள் விடுமுறை.. சொந்த ஊர்களுக்கு படையெடுக்கும் மக்கள்.. சிறப்பு பேருந்துகள் இயக்கம்