அங்கீகாரம் இல்லாத வீட்டுமனைகளை பத்திரப்பதிவு செய்யகூடாது என சென்னை உயர் நீதிமன்றம் பிறப்பித்த தடையை நீக்க முடியாது என்றும், தடை மேலும் தொடரும் என தலைமை நீதிபதி உத்தரவிட்டார்.

Add Asianetnews Tamil as a Preferred SourcegooglePreferred

விளை நிலங்களை, வீட்டுமனைகளாக மாற்றப்படுவதை தடுக்க கோரி வழக்கறிஞர் யானை ராஜேந்திரன் வழக்கு தொடர்ந்து இருந்தார். இந்த வழக்கை விசாரித்த தலைமை நீதிபதி அமர்வு, அங்கிகரிக்கப்படாத வீட்டுமனைகளை பத்திரபதிவு செய்ய தடை விதித்து உத்தரவு பிறப்பித்து இருந்தது.

இந்த உத்தரவால் ரியல் எஸ்டேட் தொழில் முடங்கி கிடப்பதாகவும், எனவே தங்களையும் ஒரு மனுதாராக இந்த வழக்கில் இனைக்க வேண்டும் ரியல் எஸ்டேட் சங்கத்தினர் வழக்கு தொடர்திருந்தனர். அதேபோல் வழக்கறிஞர் வி.பி.ஆர். மேனன் என்பவரும் விட்டுமனைகளாக ஒப்புதல் வழங்குவது தொடர்பாக விரிவான கொள்கை வகுக்கும்படி ஒரு மனு தாக்கல் செய்திருந்தார்.

இந்த 3 வழக்குகளும் இணைந்து தலைமை நீதிபதி அமர்விலான முதல் அமர்வில் விசாரணைக்கு வந்தது. மேலும் தடையை நீக்க 11 அமைப்புகள் மனு. செய்திருந்தனர். தடையை நீக்கினால் விவசாய நிலங்கள் பாழாகும். குறைந்த விலைக்கு விவசாயகளிடமிருந்து நிலத்தை வாங்கி கோடிக்கணக்கில் விற்கப்படுவதாக யானை ராஜேந்தரன் வாதம் செய்தார்.

பத்திரப்பதிவு தடையால் சில பாதிப்புகள் ஏற்பட்டுள்ளதாக அரசு தரப்பு கூடுதல் தலைமை வழக்கறிஞர் அய்யாதுரை வாதம். இந்த பிரச்சினை தொடர்பாக அரசின் கொள்கை என்ன என நீதிபதிகள் கேள்வி எழுப்பினர். இந்த பிரச்சனையை எப்படி தீர்க்க போகிறீர்கள் எனவும் நீதிபதிகள் கேள்வி எழுப்பினர்.

ஏற்கனவே அங்கீகாரம் பெறாத மனைகளை பதிவு செய்வதில்லை என அரசு பதில் அளித்தது. இதற்காக ஒரு திட்டத்தை கொண்டுவாருங்கள் என அரசுக்கு நீதிபதிகள் அறிவுரை கூறினர் . மத்திய மாநில நெடுஞ்சாலைசாலை ஓரங்களில் ப்ளாட் போடுவதால் ஒரு கட்டத்தில் தண்ணீர் பிரச்சினை என்றால் ரோட்டுக்கு வந்து போராடுவதால் மற்றொரு பிரச்சினை ஏற்படுகிறது என நீதிபதிகள் தெரிவித்தனர்.

தடையை நீக்க வேண்டும் என்ற மனுவை தள்ளுப்படி செய்ய வேண்டும் என மனுதாரர் தரப்பில் வாதம் வைக்கப்பட்டது. பத்திர பதிவு தடையால் கோடிக்கணக்கான முதலீடுகள் பாதிப்பு ஏற்பட்டுள்ளதாக ரியல் எஸ்டேட் அதிபர்கள் தரப்பு வாதம் வைத்தனர். தடை உத்தரவை மாற்றியமைக்க முடியாது என மறுத்து விட்டனர். 

மேலும் பத்திரபதிவு முழுமையாக தடை செய்யப்படவில்லை. அங்கீகரிக்கப்படாத மனைகளுக்கு மட்டுமே தடை விதிக்கப்பட்டுள்ளதாக கூறி வழக்கை நீதிபதிகள் நவம்பர் 16 ம் தேதிக்கு ஒத்தி வைத்தனர். இந்நிலையில் இந்த வழக்கு தலைமை நீதிபதி மற்றும் நீதிபதி ஆர். மகாதேவன் அமர்வு முன்பு இன்று விசாரணைக்கு வந்தது.

தெளிவான திட்டத்தை அரசு அறிவிக்கும் வரை தடை நீடிக்கும் . சட்டத்தை மீறுவது தொடர்ந்து கொண்டே தான் இருக்கிறது. சட்டத்தை மீறுவதிலிருந்து முதலில் முற்றுபுள்ளி வைப்போம் என தெரிவித்த தலைமை நீதிபதி அமர்வு தடை நீடிக்கும் என உத்தரவிட்டனர்.

விளை நிலங்களை வீட்டுமனைகளாக மாற்றக்கூடாது, அதற்கு தடை விதிக்கக்கோரி வழக்கறிஞர் யாணை ராஜேந்திரன் தொடர்ந்த வழக்கில் பத்திரபதிவுக்கு ஏற்கனவே கடந்த செப்டம்பர் 9 ம் தேதி தடை விதிக்கப்பட்டு இருந்தது குறிப்பிடத்தக்கது