பீட்டா வழக்கை சந்திக்க தயார்…!!! – வீர விளையாட்டு மீட்பு கழக தலைவர் ராஜேஷ் பதிலடி…
ஜல்லிக்கட்டில் மிருகவதை நடந்துள்ளதாக பீட்ட தொடர்ந்துள்ள வழக்கை சந்திக்க தயார் என வீர விளையாட்டு மீட்பு கழக தலைவர் ராஜேஷ் தெரிவித்துள்ளார்.
ஜல்லிக்கட்டுக்கு ஆதரவாக கடந்த ஜனவரி மாதம் மெரினாவில் இளைஞர்களால் பெரிய அளவில் போராட்டம் நடத்தப்பட்டது. தமிழகம், புதுச்சேரியிலும் ஜல்லிக்கட்டுக்கு ஆதரவாக இளைஞர்கள் போராட்டம் நடத்தினர்.
இது மட்டுமல்லாமல் வெளி நாடுகளிலும் ஜல்லிக்கட்டு குறித்து போராட்டங்கள் நடத்தப்பட்டது. இந்த நிலையில், ஜல்லிக்கட்டு நடத்தும் வகையில் மிருகவதை தடுப்பு சட்டத்தின் சில பிரிவுகளில் திருத்தங்கள் கொண்டு வரப்பட்டு, அவசர சட்டம் ஒன்றை தமிழக அரசு பிறப்பித்தது.
அதன் தொடர்ச்சியாக தமிழக சட்டப்பேரவை சிறப்பு கூட்டத்தில் ஜல்லிக்கட்டுக்காக நிரந்தர சட்டம் நிறைவேற்றப்பட்டது.
தமிழக அரசின் இந்த சட்டத்துக்கு குடியரசு தலைவர் பிரணாப் முகர்ஜி ஒப்புதல் வழங்கினார். இதனை அடுத்து தமிழகத்தின் பல்வேறு இடங்களில் ஜல்லிக்கட்டு போட்டிகள் நடைபெற்று வருகின்றன.
இதைதொடர்ந்து இன்று கடந்த ஜனவரி மாதம் நடத்தப்பட்ட ஜல்லிகட்டில் மிருகவதை நடந்துள்ளதாக கூறி, பீட்டா அமைப்பினர் உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளனர்.
இந்நிலையில், திருச்சியில் செய்தியாளர்களை சந்தித்த வீர விளையாட்டு மீட்பு கழக தலைவர் ராஜேஷ், ஜல்லிக்கட்டில் மிருகவதை நடந்துள்ளதாக பீட்ட தொடர்ந்துள்ள வழக்கை சந்திக்க தயார் எனவும், எங்களிடம் உள்ள ஆதரங்களை நீதிமன்றத்தில் சமர்பிப்போம் எனவும் தெரிவித்தார்.