தமிழ்நாட்டு வெள்ளப் பாதிப்பு: ரவிக்குமார் எம்.பி. கவன ஈர்ப்பு நோட்டீஸ்!
மிக்ஜாம் புயல் வெள்ளம் பாதிப்பு குறித்து நாடாளுமன்றத்தில் ரவிக்குமார் எம்.பி. கவன ஈர்ப்பு தீர்மான நோட்டீஸ் தாக்கல் செய்துள்ளார்
![Ravikumar MP filed Attention Motion in parliament seeking rs 5000 crore interim relief for tn floods smp Ravikumar MP filed Attention Motion in parliament seeking rs 5000 crore interim relief for tn floods smp](https://static-ai.asianetnews.com/images/01h7j45c2kafa1gdyqxvqjnbt7/ravikumar-mp_363x203xt.jpg)
தமிழ்நாட்டின் வெள்ளப் பாதிப்புக்கு இடைக்கால நிவாரணமாக ரூ.5000 கோடி வழங்க வலியுறுத்தி விழுப்புரம் எம்.பி. ரவிக்குமார் நாடாளுமன்றத்தில் கவன ஈர்ப்பு தீர்மான நோட்டீஸ் தாக்கல் செய்துள்ளார். அதில், மிக்ஜாம் சூறாவளியின் தாக்கத்தால் தமிழ்நாடு பாதிக்கப்பட்டுள்ளது. கடற்கரையை ஒட்டி சூறாவளி நிலையாக மையம் கொண்டதால் நிலைமை மோசமானது. இரண்டு நாட்களாக இடைவிடாத மழை பெய்தது. கடந்த 47 ஆண்டுகளில் இல்லாத அளவுக்குப் பெய்த வரலாறு காணாத மழையின் காரணமாக சென்னையில் கடுமையான வெள்ளப் பெருக்கு ஏற்பட்டது.
இதனால் சென்னையில் சாலைகள் மற்றும் வடிகால் அமைப்புகளில் பெருமளவிலான சேதம் ஏற்பட்டுள்ளது. இதுவரை ஒன்பது உயிர்கள் பலியாகியுள்ளன, புறநகர்ப் பகுதிகளில் உள்ள பல குடியிருப்புப் பகுதிகள் நீரில் மூழ்கியுள்ளன. மக்கள் உயரடுக்குக் கட்டடங்களில் தஞ்சம் புகுந்துள்ளனர். தெருக்களும், அடுக்குமாடிக் குடியிருப்புகளும் இயற்கைப் பேரழிவிற்கு சாட்சியாக நிற்கின்றன. வீடுகளிலும், வீதிகளிலும் நிறுத்தப்பட்டிருந்த கார்களும் வாகனங்களும் வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்டு சேதம் அடைந்துள்ளன. ராணுவ வீரர்களும், என்டிஆர்எப் வீரர்களும் படகுகள் மூலம் பாதிக்கப்பட்ட பகுதிகளில் மீட்புப் பணியில் ஈடுபட்டுள்ளனர்.
சர்ச்சையை கிளப்பிய மாட்டு சிறுநீர் பேச்சு.. திமுக எம்பி செந்தில்குமாரை கண்டித்த மு.க ஸ்டாலின்..!
ஏற்கனவே, 11 லட்சம் உணவுப் பொட்டலங்கள் விநியோகிக்கப்பட்டுள்ள நிலையில், 9 மாவட்டங்களில் 61,666 பேர் நிவாரண முகாம்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர் என்று மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அறிவித்துள்ளார். பால் பாக்கெட்டுகள் போன்ற அத்தியாவசிய பொருட்கள் வழங்குவது உள்ளிட்ட விரிவான ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. நிலைமையின் தீவிரத்தை உணர்ந்து தமிழ்நாட்டுக்கு இடைக்கால நிவாரண நிதியாக ரூ.5000 கோடி ரூபாய் வழங்குமாறு ஒன்றிய அரசிடம் முதலமைச்சர் வேண்டுகோள் விடுத்துள்ளார்.
இந்த நிவாரணத்தை உடனடியாக வழங்குமாறும், பேரிடர் குறித்த முழுமையான மதிப்பீட்டை மேற்கொள்ள ஏதுவாக மத்திய குழுவை உடனடியாக சென்னைக்கு அனுப்புமாறும் பணிவுடன் கேட்டுக் கொள்கிறேன்.” இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.