Asianet News TamilAsianet News Tamil

TNPSC EXAM : டி.என்.பி.எஸ்.சி குரூப் 4 தேர்வில் குளறுபடி... தேர்வை ரத்து செய்து மறு தேர்வு நடத்திடுக- ராமதாஸ்

சில இடங்களில் தேர்வர்கள் விடையளிக்க முழுமையாக  3 மணி நேரம் வழங்கப்பட்ட நிலையில், பெரும்பான்மையான இடங்களில் தேர்வர்களுக்கு 25% வரை நேர இழப்பு ஏற்பட்டிருகிறது என தெரிவித்துள்ள ராமதாஸ் இது அனைவருக்கும் சமவாய்ப்பு; சமநீதி என்ற தத்துவத்திற்கு எதிரானது என கூறியுள்ளார். 

Ramadoss requests to cancel TNPSC Group 4 exam and conduct re examination kak
Author
First Published Jun 11, 2024, 12:31 PM IST

குரூப் 4 தேர்வில் குளறுபடி

தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் நடத்திய நான்காம் தொகுதி பணிகளுக்கான போட்டித் தேர்வுகளில் மாநிலம் முழுவதும் மிகப்பெரிய அளவில் குளறுபடிகள் நடைபெற்றிருப்பதாக குற்றச்சாட்டுகள்  எழுந்துள்ளதாக பாமக நிறுவனர் ராமதாஸ் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில்,  தமிழ்நாடு அரசுத் துறைகளில் காலியாக உள்ள நான்காம் தொகுதி பணியிடங்களை நிரப்பும் நோக்குடன் தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையத்தின் மூலம் கடந்த 9ஆம் நாள் போட்டித் தேர்வுகள் நடத்தப்பட்டன.

மொத்தம் 6244 பேரை தேர்ந்தெடுப்பதற்கான இந்தப் போட்டித் தேர்வுக்காக தமிழ்நாடு முழுவதும் 7247 தேர்வு மையங்களும், அவற்றில் 40 ஆயிரத்திற்கும் அதிகமான தேர்வுக் கூடங்களும் அமைக்கப்பட்டிருந்தன. இத்தேர்வில் பங்கேற்க 20 லட்சத்திற்கும் கூடுதலானவர்கள் விண்ணப்பித்து இருந்த நிலையில் அவர்களில் 15 லட்சத்திற்கும் அதிகமானவர்கள் எழுத்துத் தேர்வில் பங்கேற்றனர்.

கல்விக்கடன் ரூ.1 லட்சத்தில் இருந்து ரூ.5 லட்சமாக உயர்வு.. மாணவர்களுக்கு தமிழ்நாடு அரசு சொன்ன குட்நியூஸ்!

Ramadoss requests to cancel TNPSC Group 4 exam and conduct re examination kak

தேர்வு கண்காணிப்பாளர்- எதுவும் தெரியவில்லை

தொகுதி 4 பணிக்கான போட்டித்தேர்வுகளுக்கு தேர்வுக் கூட கண்காணிப்பாளர்களாக வந்தவர்களுக்கு இத்தேர்வு நடைமுறைகள் குறித்து எதுவும் தெரியவில்லை. சரியாக 9.00 மணிக்கு விடைத்தாள் வழங்கப் பட வேண்டும்; 9.15 மணிக்கு வினாத்தாள் தொகுப்பு வழங்கப்பட்டு, அதில் உள்ள பக்கங்கள் சரியாக உள்ளனவா? என்பதை ஆய்வு செய்த பிறகு, வினாத்தாள் எண்ணை விடைத்தாளில் குறிப்பிட வேண்டும். அதன் பிறகு சரியாக காலை 9.30 மணி முதல் தேர்வர்கள் விடைகளை எழுதத் தொடங்க வேண்டும். ஆனால், பல மையங்களில் தேர்வுக் கூட கண்காணிப்பாளர்கள் காலை 9.15 மணிக்கு பிறகு தான்  தேர்வுக் கூடங்களுக்கு வந்துள்ளனர். அதைத் தொடர்ந்து மிகவும் தாமதமாகத்தான் விடைத்தாள்களையும், வினாத்தாள்களையும் வழங்கியுள்ளனர். சில கூடங்களில் காலை 10 மணிக்குப் பிறகு தான் வினாத் தாள்கள் வழங்கப்பட்டுள்ளன. 

தேர்வு எழுத நேரமே கொடுக்கவில்லை

இதனால், பல்லாயிரக்கணக்கான தேர்வர்களால் தேர்வை சரியாக எழுத முடியவில்லை. அனுமதிக்கப்பட்டதை விட குறைவான நேரத்தில் விடை எழுத வேண்டியிருந்ததால்  பலர் சரியான விடையை தீர்மானிக்க முடியாமல், தவறான விடையை தேர்ந்தெடுத்ததும் நிகழ்ந்துள்ளது. அதேபோல், விடை எழுதுவதற்கான நேரம் 12.30 மணிக்கு முடிவடைந்த பிறகு தான் 12.30 மணி முதல் 12.45 மணி வரை,  எத்தனை வினாக்களுக்கு ஏ வாய்ப்பை தேர்ந்தெடுத்துள்ளனர், எத்தனை வினாக்களுக்கு பி வாய்ப்பை தேர்ந்தெடுத்துள்ளனர் என்ற விவரத்தை பத்திவாரியாக விடைத்தாளின் முதல் பக்கத்தில் இரு இடங்களில் பதிவு செய்ய வேண்டும். ஆனால், தேர்வுக்கான நேரம் முடிவடைவதற்கு 15 நிமிடங்கள் முன்பாகவே இந்த பணிகளை மேற்கொள்ள வேண்டும் என்றும், 12.30 மணிக்குள்ளாக இந்த பணிகளை முடிக்க வேண்டும் என்றும் தேர்வுக்கூட கண்காணிப்பாளர்கள் கட்டாயப்படுத்தியுள்ளனர்.

சபாநாயகர் பதவியை சந்திரபாபு நாயுடு குறி வைக்க இதுதான் காரணம்.. ஷாக் தகவலை கூறும் பீட்டர் அல்போன்ஸ்

Ramadoss requests to cancel TNPSC Group 4 exam and conduct re examination kak

 விடைத்தாள் மற்றும் வினாத்தாள் வழங்குவதில் ஏற்பட்ட தாமதம், தேர்வுக்கு பிந்தைய பணிகளை முன்கூட்டியே செய்ய கட்டாயப்படுத்துதல் போன்றவற்றால் ஒவ்வொரு தேர்வருக்கும் 15 நிமிடங்கள் முதல் 45 நிமிடங்கள் வரை நேர இழப்பு ஏற்பட்டுள்ளது. இது கடும் பாதிப்பை  ஏற்படுத்தியுள்ளது. தமிழ்நாட்டைப் பொறுத்தவரை அரசுப் பணியாளர் தேர்வாணையம் நடத்தும் தொகுதி 4 தேர்வு  தான் மிகப்பெரிய அளவில் நடத்தப்படும் தேர்வு ஆகும். இந்தத் தேர்வை நடத்த 50 ஆயிரத்திற்கும் கூடுதலான பணியாளர்கள் ஈடுபடுத்தப்படுகின்றனர். அவர்களுக்கு முழுமையான பயிற்சி அளிக்கப்படாதது தான் நிகழ்ந்த குழப்பங்களுக்குக் காரணம் ஆகும். சில இடங்களில் தேர்வர்கள் விடையளிக்க முழுமையாக  3 மணி நேரம் வழங்கப்பட்ட நிலையில், பெரும்பான்மையான இடங்களில் தேர்வர்களுக்கு 25% வரை நேர இழப்பு ஏற்பட்டிருகிறது. இது அனைவருக்கும் சமவாய்ப்பு; சமநீதி என்ற தத்துவத்திற்கு எதிரானது.

 மறு தேர்வு நடத்திடுக

இந்த குளறுபடிகளுக்கு தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் தான் முழு பொறுப்பேற்க வேண்டும். டி.என்.பி.எஸ்.சி நான்காம் தொகுதி தேர்வுகளில் நடைபெற்ற குளறுபடிகள் குறித்து முழுமையான  விசாரணை நடத்த தமிழக அரசுக்கு ஆணையிட வேண்டும். தேர்வர்கள் அனைவருக்கும் சமவாய்ப்பு வழங்கும் நோக்குடன் 9ஆம் நாள் நடத்தப்பட்ட தேர்வை ரத்து செய்து விட்டு, விதிமுறைகளை முழுமையாக பின்பற்றி மறு தேர்வு நடத்துவதற்கும் தேர்வாணையத்திற்கு அரசு ஆணையிட வேண்டும்
 

Latest Videos
Follow Us:
Download App:
  • android
  • ios