பாலில் ரசாயன பொருட்கள் கலக்கவில்லை என நிரூபித்தால் "தூக்கில் தொங்கத் தயார்"... அமைச்சர் ராஜேந்திர பாலாஜி சவால்..
தனியார் நிறுவனங்கள் பாலில் ரசாயன பொருட்கள் கலக்கவில்லை என்று நிரூபித்தால் தூக்கில் தொங்கத் தயாரா இருக்கிறேன் என பால்வளத்துறை அமைச்சர் ராஜேந்திர பாலாஜி தனியார் பால் நிறுவனங்களுக்கு சவால் விடுத்துள்ளார்.
நேற்று முன்தினம் ஆவின் மட்டுமே சுத்தமான பாலை விநியோகிப்பதாகவும், தனியார் நிறுவனங்கள் விநியோகிக்கும் பால் விஷத்தன்மை கொண்டது என்றும் அதிர்ச்சித் தகவலை வெளியிட்டார்.
அமைச்சரின் குற்றச்சாட்டுக்கு தனியார் பால் நிறுவனங்கள் மறுப்பு தெரிவித்துள்ளன. தாங்கள் பாலில் ரசாயனத்தை கலக்கவில்லை என்றும் அவர்கள் விளக்கமளித்தனர்.
ஆனால் அதற்கு பதில் அளிக்கும் விதமாக பேசிய அமைச்சர், தனியார் பால் நிறுவனங்கள் தயிரையே பாலாக்குகின்றன என்று மீண்டும் அவர் குற்றம்சாட்டினார். பால் கெடாமல் இருக்க ரசாயனம கலக்கப்படுவதாகவும், இந்த பால் உடல் நலத்திற்கு கேடானது, கலப்படம் செய்யும் பால் நிறுவனங்களிடம் காசு வாங்கி சாப்பிட்டால் மனிதக்கழிவுகளை சாப்பிடுவதற்கு சமம் என்றும் தெரிவித்தார்.
மேலும் தனியார் பால் நிறுவனங்கள் தாங்கள் பாலில் கலப்படம் செய்யவில்லை என நிரூபிக்க தயாரா? அப்படி தனியார் பாலில் ரசாயன பொருட்கள் கலக்கவில்லை என்று நிரூபித்தால் தூக்கில் தொங்கத் தயாரா இருக்கிறேன் என்றும் அவர் சவால் விடுத்தார். தனியார் நிறுவனங்கள் பாலில் ரசாயனம் கலப்பதை நிறுத்திக்கொள்ள வேண்டும் என்றும், இல்லை என்றால் சட்டரீதியாக நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் அவர் எச்சரித்தார்.
இந்நிலையில் சிவகாசியில் இன்று செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் ராஜேந்திர பாலாஜி, தனியார் பால் நிறுவனங்களிடமிருந்து மாதிரி பால் சேகரிக்கப்பட்டு, மத்திய அரசின் ஆய்வகங்களுக்கு ஆய்வுக்காக அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாக தெரிவித்தார்.
தனியார் நிறுனங்கள் விநியோகிக்கும் பாலில் ரசாயன்ம் கலக்கப்படவில்லை என நிரூபிக்கப்பட்டால் பதவி விலக தயார் என அமைச்சர் ராஜேந்திர பாலாஜி அதிரடியாக தெரிவித்தார்.