வெப்பச்சலனம் காரணமாக அடுத்த 24 மணிநேரத்தில், தென்தமிழகத்தில் இடியுடன் கூடிய கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

தமிழகத்தில் வெப்பச்சலனம் காரணமாக கடந்த சில நாட்களாக பரவலாக மழை பெய்து வருகிறது. திருப்பூர், திண்டுக்‍கல், மதுரை, தூத்துக்‍குடி, நெல்லை ஆகிய மாவட்டங்களில் பல்வேறு இடங்களில் நேற்று மழை பெய்தது. அதிகபட்சமாக திருப்பூர் மாவட்டம் மூலனூர், திண்டுக்‍கல் மாவட்டம் சத்திரப்பட்டி ஆகிய இடங்களில் தலா 8 சென்டிமீட்டர் மழையும், ஈரோடு, குமாரபாளையம் ஆகிய இடங்களில் தலா 7 சென்டிமீட்டர் மழையும், திருவாடானை, ஆர்.எஸ். மங்கலம், மதுரை பெரியார், வேடசந்தூர் மற்றும் காங்கேயத்தில் தலா 6 சென்டிமீட்டர் மழையும் பதிவாகியுள்ளது.

இதனிடையே, வெப்பச்சலனம் காரணமாக தென்தமிழகத்தில் இடியுடன் கனமழையும், வடதமிழகம் மற்றும் புதுச்சேரியில் ஓரிரு இடங்களிலும் மழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. சென்னையைப் பொறுத்தவரை வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும் என்றும், பகல் நேரத்தில் அதிகபட்சமாக 34 டிகிரி செல்சியஸூம், குறைந்தபட்சமாக 25 டிகிரி செல்சியஸூம் வெப்பம் நிலவும் என்றும் அறிவிக்‍கப்பட்டுள்ளது.