சென்னையில் விடிய,விடிய வெளுத்துவாங்கிய மழை… சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம் உள்ளிட்ட 5 மாவட்டங்களில் இன்னைக்கும் ஸ்கூல் லீவு !!!
சென்னை உள்ளிட்ட கடலோர மாவட்டங்களில் தொடர்ந்து மழை பெய்து வருவதால் சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், கடலூர், நாகை உள்ளிட்ட மாவட்டங்களில் இன்று பள்ளிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.
தென்மேற்கு வங்கக் கடலில் இலங்கை அருகே மையம் கொண்டிருந்த வளி மண்டல மேலடுக்கு சுழற்சி அதே இடத்தில் மையம் கொண்டு இருப்பதால் சென்னை உள்பட தமிழகத்தின் கடலோர மாவட்டங்களில் இன்றும் மழை பெய்யும் என சென்னை வானிலை மைய இயக்குனர் பாலச்சந்திரன் தெரிவித்திருந்தார்.
அதே நேரத்தில் இன்று முதல் நவம்பர் 3 ஆம் தேதி வரை பருவமழை தீவிரம் அடையும் என்றும் தமிழகத்தின் கடலோர மாவட்டங்களிலும், உள் மாவட்டங்களிலும், புதுவையிலும் பலத்த, மிக பலத்த மழை பெய்யும் என்றும் இந்திய வானிலை ஆய்வு மையம் அறிவித்து உள்ளது
நேற்று பகல் நேரத்தில் மழை சற்று ஓய்ந்திருந்த நிலையில் இரவு 11 மணிக்கு மேல் மழை கொட்டத் தொடங்கியது. ராயபுரம், தண்டையார்பேட்டை, கிண்டி, குரோம்பேட்டை உள்ளிட்ட பல பகுதிகளில் நள்ளிரவு தொடங்கிய மழை விடிய,விடிய கொட்டித் தீர்த்தது.
வட சென்னை பகுதியான வியாசர்பாடி போன்ற பகுதிகளிலும் தொடர் மழையால் சாலைகளில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடியது. ஏராளமான வீடுகளுக்குள் மழைநீர் புகுந்துள்ளதால் பொது மக்கள் பெரிதும் சிரமத்துக்கு ஆளாகியுள்ளனர்.
இந்த தொடர் மழையால் சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், நாகை உள்ளிட்ட மாவட்டங்களில் இரண்டாவது நாளாக இன்றும் பள்ளிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.
இதே போன்று கடலூர் மாவட்டத்தில் ஒரு சில தாலுகாக்களில் மட்டும் பள்ளிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.