கன மழை... புதுகை, நாகை, திருவாரூர் மாவட்ட பள்ளிகளுக்கு நாளை விடுமுறை!
கனமழை எச்சரிக்கையை தொடர்ந்து புதுக்கோட்டை மாவட்டத்தில் பள்ளி, கல்லூரிகளுக்கு நாளை (3.112017) விடுமுறை விடப்படுவதாக மாவட்ட ஆட்சியர் அறிவித்துள்ளார்.
நாகை மாவட்டத்திலும் நாளை (03.11.2017) பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை விடப்படுவதாக ஆட்சியர் அறிவித்துள்ளார்.
கனமழை காரணமாக திருவாரூர் மாவட்டத்தில் நாளை பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை என்று ஆட்சியர் நிர்மல்ராஜ் அறிவித்தார்.
திருவள்ளூர் மாவட்ட பள்ளிகளுக்கு நாளை விடுமுறை விடப்படுவதாக மாவட்ட ஆட்சியர் சுந்நரவல்லி அறிவித்தார்.
இதனிடையே, மழையின் நிலவரத்தை தொடர்ந்து கவனித்து வருவதாகவும், சூழ்நிலையைப் பொறுத்து பள்ளி விடுமுறை குறித்து அறிவிப்பதாகவும் சென்னை ஆட்சியர் அன்புச் செல்வன் தெரிவித்திருந்தார். பின்னர் இரவு 9.20 அளவில் சென்னையின் மழை நிலவரத்தை அடுத்து நாளை பள்ளிகளுக்கு விடுமுறை அளிக்கப்படுவதாக அவரும் அறிவித்தார்.
இதனிடையே வடக்கு, மத்திய சென்னையை அடுத்து தென் சென்னையிலும் மழை வலுத்து வருகிறது. பழைய மகாபலிபுரம் சாலை, கிழக்குக் கடற்கரைச் சாலை மற்றும் சென்னையின் இதர புறநகர்ப் பகுதிகளில் வடக்கில் இருந்து மேகக்கூட்டங்கள் நகர்ந்து மழை பெய்து வருகின்றது. எனவே இன்று இரவு கன மழை பெய்யக் கூடும்.
இன்று செய்தியாளர்களிடம் பேசிய வானிலை ஆய்வு மைய இயக்குனர் பாலசந்திரன், அடுத்த 24மணி நேரத்தில் தமிழகத்தின் தென் மாவட்டங்கள் புதுக்கோட்டை, டெல்டா மாவட்டங்கள் மற்றும் காரைக்கால் பகுதியில் ஓரிரு இடங்களில் கன மழை பெய்யக்கூடும். இராமநாதபுரம், தூத்துக்குடி, திருநெல்வேலி, கன்னியாகுமரி, சிவகங்கை, விருதுநகர், தேனி, திண்டுக்கல், மதுரை ஆகிய தென்மாவட்டங்களிலும், தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம் ஆகிய டெல்டா மாவட்டங்களிலும் கன மழை பெய்யும் என்று கூறியிருந்தார்.