தமிழக அரசு பேருந்துக்கு மர்ம நபர்கள் தீ வைப்பு... அலறி அடித்து தப்பித்த பயணிகள்...
புதுச்சேரியில் இருந்து சென்னைக்கு வந்த தமிழக அரசு பேருந்துக்கு மர்ம நபர்கள் நேற்று தீவைத்து எரித்துள்ளனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை
ஏற்படுத்தியுள்ளது
புதுச்சேரியில் இருந்து சென்னைக்கு புறப்பட்ட விழுப்புரம் போக்குவரத்து அரசு பேருந்து, நேற்று காலாப்பட்டு அருகே வந்து கொண்டிருந்தது. அப்போது அங்கு
வந்த மர்ம நபர்கள், பேருந்து மீது கல்வீசி தாக்கியுள்ளனர்.
இதனால் பயணிகள் அலறியடித்துக் கொண்டு கீழே இறங்கினர். பின்னர் அந்த மர்ம நபர்கள், பேருந்து மீது பெட்ரோல் குண்டுகளை வீசிச் சென்றனர். இதில்
பேருந்து தீப்பற்றி எரிந்து சேதமடைந்தது.
இந்த சம்பவம் குறித்து தகவல் அறிந்து வந்த காலாப்பட்டு தீயணைத்துறையினர், தீயை அணைத்தனர். ஆனாலும், பேருந்து முற்றிலும் எரிந்து சேதமடைந்தது.
தமிழக அரசு பேருந்துக்கு தீ வைக்கப்பட்டது தொடர்பாக தமிழகம் மற்றும் புதுச்சேரி போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.
மர்ம நபர்கள், பேருந்தை எரித்தபோது எடுக்கப்பட்ட வீடியோ தற்போது சமூக வலைத்தளத்தில் வெகுவாக பரவி வருகிறது. வீடியோ பதிவை வைத்து போலீசார் மர்ம நபர்களை தேடி வருகின்றனர்.
விழுப்புரம் குயிலாப்பாளையம் மற்றும் புதுச்சேரி பொம்மையார்பாளையத்தைச் சேர்ந்தவர்கள் என்பது தெரியவந்துள்ளது. பேருந்தை எரித்தவர்கள் மீது 9 பிரிவுகளின்கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டு போலீசார் தேடி வருகின்றனர்.
அவர்களைப் பிடித்து விசாரித்த பின்னரே பேருந்து எரிப்பு சம்பவத்துக்கு என்ன காரணம் தெரிய வரும் என்று போலீசார் கூறுகின்றனர்.