ஸ்ரீஹரிகோட்டாவில் இருந்து ஏவப்பட்ட பிஎஸ்எல்வி சி-61 ராக்கெட் மூன்றாவது அடுக்கில் ஏற்பட்ட தொழில்நுட்பக் கோளாறால் தோல்வியடைந்தது. 8 ஆண்டுகளில் இஸ்ரோவுக்கு ஏற்பட்ட முதல் தோல்வி இதுவாகும்.
பிஎஸ்எல்வி சி-61 ராக்கெட்
ஆந்திர மாநிலம் ஸ்ரீஹரிகோட்டாவில் உள்ள சதீஷ் தவான் விண்வெளி மையத்திலிருந்து பிஎஸ்எல்விசி 61 ராக்கெட் மூலம் இந்த செயற்கைக்கோள் இன்று அதிகாலை 5.59 மணிக்கு விண்ணில் செலுத்தபட்டது. இதில், பாதுகாப்பு மற்றும் புவி கண்காணிப்பிற்காக 1,696 கிலோ எடை கொண்ட EOS-09 என்ற செயற்கைக்கோள் இதில் பொருத்தப்பட்டிருந்தது. குறிப்பாக அனைத்து காலநிலைகளையும் துல்லியமாக படம் எடுக்கும் திறன் கொண்டது.
தொழில்நுட்ப கோளாறு
இந்நிலையில் இரண்டு அடுக்குகள் வெற்றிகரமாக பிரிந்த நிலையில், மூன்றாவது அடுக்கில் ஏற்பட்ட தொழில்நுட்ப கோளாறு ஏற்பட்டது. இதனால் திட்டம் தோல்வி அடைந்ததாக அறிவிக்கப்பட்டது.
இஸ்ரோ தலைவர் நாராயணன்
இதுதொடர்பாக இஸ்ரோ தலைவர் நாராயணன் கூறுகையில்: இஸ்ரோவின் 101 ராக்கெட் இன்று ஏவப்பட்டது. 2வது அடுக்கு பிரியும் வரை பிஎஸ்எல்வி C61 ராக்கெட்டின் செயல்பாடு சரியாகத்தான் இருந்தது. 3வது அடுக்கு பிரியும்போது தொழில்நுட்ப கோளாறு ஏற்பட்டதால் திட்டத்தை வெற்றிகரமாக செயல்படுத்த முடியவில்லை. தவறுக்கான காரணத்தை ஆய்வு செய்து மீண்டும் வருவோம் என தெரிவித்துள்ளார்.
8 ஆண்டுகளுக்குப் பிறகு தோல்வி
இது ஸ்ரீஹரிகோட்டாவில் இருந்து ஏவப்பட்ட 101வது ராக்கெட் திட்டமாகும். கடந்த 2017 முதல் இஸ்ரோவின் திட்டங்கள் 58 முறை தொடர்ச்சியாக வெற்றி அடைந்தே வந்தது. இப்போது சுமார் 8 ஆண்டுகளுக்குப் பிறகு முதல் முறையாகத் திட்டம் தோல்வி அடைந்தது குறிப்பிடத்தக்கது.
