அலங்காநல்லூரில் ஜல்லிக்கட்டு நடத்த வலியுறுத்தி, நேற்று இரவு முதல் விடிய விடிய பொதுமக்கள் போராட்டம் நடத்தி வருகின்றனர். இதனால், அலங்காநல்லூர் பகுதியில் பதற்றம் நிலவுகிறது.

தமிழகத்தில் ஜல்லிக்கட்டு போட்டி நடத்த வலியுறுத்தி கடந்த சில நாட்களாக ஏராளமானோர் ஆர்ப்பாட்டம்,போராட்டம், சாலை மறியல், ரயில் மறியல் உள்பட பல்வேறு போராட்டங்கள் நடத்தினர். ஆனால், உச்சநீதிமன்றம், ஜல்லிக்கட்டு போட்டி நடத்த தடை உத்தரவிட்டது.

இதையடுத்து நேற்று பல்வேறு பகுதிகளில் உச்சநீதிமன்ற தடையை மீறி ஜல்லிக்கட்டு போட்டி நடத்தப்பட்டது. அங்கு சென்ற போலீசார், அவர்களை தடுத்து நிறுத்தி கைது செய்தனர்.

இதைதொடர்ந்து நேற்று மதுரை மாவட்டம் அலங்கா நல்லூரில், உச்சநீதிமன்ற தடையை மீறி ஜல்லிக்கட்டு போட்டி நடத்துவதாக அறிவிக்கப்பட்டது. இதையொட்டி நேற்று அதிகாலை முதல் பல்வேறு மாவட்டங்களில் இருந்து ஆயிரக்கணக்கான வாலிபர்கள் திரண்டனர். பொதுமக்களும், ஜல்லிக்கட்டுக்கு ஆதரவு தெரிவித்து குவிந்தனர்.

அப்போது, ஜல்லிக்கட்டு போட்டி நடத்துவதற்காக காளைகளை, சில வாலிபர்கள் கழற்றி விட்டனர். இதனால், போலீசார் அங்கு தடியடி நடத்தினர். இதுதொடர்பாக சிலரை, போலீசார் கைது செய்தனர். இதனால், அலங்காநல்லூர் பகுதியில் பரபரப்பும், பதற்றமும் நிலவி வருகிறது.

இந்நிலையில், நேற்று இரவு விடிய விடிய முதல் பெண்கள், முதியோர், வாலிபர்கள் என ஆயிரக்கணக்கான மக்கள், திரண்டு போராட்டம் நடத்தி வருகின்றனர். கைது செய்யப்பட்டவர்களை விடுவிக்க கோரியும், கைது செய்த போலீசாரை கண்டித்தும் கோஷமிட்டு வருகின்றனர்.

மேலும், ஜல்லிக்கட்டு போட்டிக்கு ஒத்துழைப்பு வழங்காவிட்டால், அமைச்சர் கடம்பூர் ராஜு வீடு அல்லது அலுவலகத்தை முற்றுகையிடுவோம் என கூறியுள்ளனர்.

இதேபோல் ஜல்லிக்கட்டு போட்டி நடத்த வலியுறுத்தியும், ஜல்லிக்கட்டு நடத்த முயன்றவர்களை கைது செய்ததை கண்டித்து சென்னை காமராஜர் சாலை மெரினா கடற்கரையில் இன்று ஏராளமான வாலிபர்கள், திரண்டு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.