ரூ.3000/- கொடுத்து துப்புரவு பணியாளர்களை குஷிப்படுத்திய அமைச்சர் சேவூர் ராமசந்திரன்!
நாட்டில் உள்ள மிக தூய்மையான பட்டியலில் மதுரை மீனாட்சி அம்மன் கோயில் சேர்க்கப்பட்டுள்ள நிலையில் கோயிலின் துப்புரவு பணியாளர்களுக்கு அமைச்சர் சேவூர் ராமசந்திரன் ரூ.3000 பரிசு தொகையினை வழங்கி பாராட்டினார்.
மிகத் தூய்மையான இடங்கள், சின்னங்கள் குறித்த பட்டியலில் மதுரை மீனாட்சி அம்மன் கோயிலையும் மத்திய அரசு இணைத்து, “கிளீனஸ்ட் அய்கானிக் பிளேஸ்” என்று அங்கீகாரத்தையும், கவுரவத்தையும் அளித்துள்ளது.
தூய்மை இந்தியா இயக்கம் விருதுக்கு மதுரை மாநகராட்சி தேர்வு செய்யப்பட்டு டெல்லியில் விருது அளிக்கப்பட்டது. இந்த விருதை மத்திய குடிநீர் மற்றும் சுகாதராத்துறை அமைச்சர் உமாபாரதியிடம் இருந்து மதுரை மாவட்ட கலெக்டர் வீரராகவ ராவ், மாநகராட்சி ஆணையர் எஸ். அணீஷ் சேகர் ஆகியோர் பெற்றுக்கொண்டனர்.
இந்த விருது குறித்தும், மதுரை மீனாட்சி அம்மன் கோயிலுக்கு கிடைத்துள்ள கவுரம் குறித்தும் மதுரை மாநகராட்சி ஆணையர் அணீஷ் சேகர் கூறும்போது, மதுரை மீனாட்சி அம்மன் கோயிலுக்கு மத்திய அரசு புதிய கௌரவம் அளித்துள்ளது என்று கூறினார். நாட்டின் மிக தூய்மையான 10 முக்கிய சின்னங்கள் பட்டியலில் மதுரை மீனாட்சி அம்மன் கோயில் சேர்க்கப்பட்டுள்ளது என்றார்.
சித்திரை வீதிகளிலும் குப்பைத் தொட்டிகள் வைக்கப்பட்டு, சேகரிக்கப்பட்டு வருகின்றன. இதற்காக துப்புரவு பணியாளர்கள், பேட்டரி வாகனத்தில் வலம் வந்து கொண்டே இருப்பார்கள். பக்தர்கள் வசதிக்காக 25 பயோ கழிவறையும், 15 இலவச சுத்தமான குடிநீர் வழங்கும் இயந்திரங்களும் நிறுவப்பட்டுள்ளன.
இந்த நிலையில், மதுரை மீனாட்சி அம்மன் கோயிலை தூய்மையுடன் பராமமரிப்பதில் பெரும் பங்காற்றி வரும் துப்புறவு பணியாளர்களுக்கு அமைச்சர் சேவூர் ராமசந்திரன் இன்று பரிசு வழங்கினார். துப்புரவு பணியாளர்க 276 பேருக்கு தலா ரூ.3000 பரிசு தொகையினை அமைச்சர் வழங்கினார்.