Prisoners brought vegetables manufactured clothes and furniture to open the sale center ...

திருச்சி

சிறைவாசிகளால் விளைவிக்கப்பட்ட காய்கறிகள், தயாரிக்கப்பட்ட ஆடைகள், மரச்சாமான்கள் போன்றவற்றை விற்கும் விற்பனை மையத்தை சிறைத்துறை ஏ.டி.ஜி.பி. சி.சைலேந்திரபாபு திறந்து வைத்தார்.

திருச்சி மத்திய சிறையில் வளாகத்தில் கடந்த ஒரு வருடத்திற்கும் மேலாக மூடியிருந்த சிற்றுண்டிச்சாலை, இனிப்பகம் மற்றும் ஆயத்த ஆடைகள் விற்பனை மையம் ஆகியவற்றை சிறைத்துறை ஏ.டி.ஜி.பி. சி.சைலேந்திரபாபு மீண்டும் திறந்து வைத்தார்.

பின்னர், செய்தியாளர்களிடம், “சிறைவாசிகள் மீதான மக்களின் எண்ணத்தை மாற்றும் விதமாக, சிறை வளாகங்களில் காய்கறிகள் விளைவிக்கப்படுகிறது. மேலும், குறைந்த விலையில் ஆயத்த ஆடைகள், பர்னிச்சர்களும் சிறைவாசிகளால் தயாரிக்கப்பட்டு விற்பனை செய்யப்படுகிறது.

அவைகளை சந்தைப்படுத்தும் விதமாக சிற்றுண்டிச் சாலை, இனிப்பகம் மற்றும் ஆயத்த ஆடைகள் விற்பனையகம் திறந்து வைக்கப்படுகிறது.

அனைத்துச் சிறைகளிலும் கைதிகள் செல்லிடப்பேசி பயன்படுத்துவதைத் தடுக்கும் வகையில், ஜாமர் கருவிகள் பொருத்தும் பணிகள் ரூ.5 கோடியில் நடைபெற்று வருகின்றன.

சிறைத்துறை ஏ.டி.ஜி.பி., மற்றும் கண்காணிப்பாளர்களுக்கு உள்ள அதிகாரத்தின் மூலம், நன்னடத்தை விதிகள் மூலம், 22 பெண் உள்பட 776 கைதிகள் அவர்களின் தண்டனைக் காலம் முடியும் முன்பே விடுதலை செய்யப்பட உள்ளனர்” என்று அவர் தெரிவித்தார்.