power connection in 24 hours

வீடு மற்றும் வணிக பயன்பாட்டுக்கு 24 மணி நேரத்தில் மின் இணைப்பைப் பெறும் புதியத் திட்டத்தை தமிழக மின்சாரத் துறை அமைச்சர் பி.தங்கமணி தொடங்கி வைத்தார்.

புதிய மின் இணைப்பு கோரும் வீடுகள் மற்றும் வணிகக் கட்டடங்கள் மின்பகிர்மானப் பெட்டியிலிருந்து 100 அடி தூரத்துக்குள் இருந்தால், விண்ணப்பித்த 24 மணி நேரத்துக்குள் இணைப்பு வழங்கப்படும் என்று தமிழக அரசு அறிவித்துள்ளது.

இதே நேரத்தில் மின் இணைப்பு கோரும் இடம் புதைவடம் இருக்கும் பகுதியில் இருந்தால் விண்ணப்பித்த 48 மணி நேரத்துக்குள் இணைப்பு வழங்கப்படும் என்றும் இந்தத் திட்டம் அடுக்குமாடி குடியிருப்புகள், பலமாடி வணிகக் கட்டடங்களுக்குப் பொருந்தாது என்றும் தமிழக அரசு அறிவித்துள்ளது.

புதிய மின் இணைப்புக்கு விண்ணப்பிப்போர் தமிழ்நாடு மின்உற்பத்தி மற்றும் பகிர்மானக் கழகத்தின் www.tangedco.gov.in என்ற இணையதளத்தின் மூலமாகவோ, அந்தந்தப் பகுதி மின்வாரிய அலுவலகத்தில் நேரடியாகவோ விண்ணப்பிக்கலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்த புதிய திட்டத்தை தொடங்கி வைத்துப் பேசிய அமைச்சர் அமைச்சர் தங்கமணி , தமிழகம் கடந்த 2 ஆண்டுகளாக மின்மிகை மாநிலமாகத் திகழ்ந்து வருகிறது என்றும் தமிழகத்தைப் பொருத்தவரை 3 ஆயிரம் மெகாவாட் மின்சாரம் உபரியாக உள்ளது என்றும் தெரிவித்தார்.