‘‘இந்த முறை மதுரை வடக்கு தொகுதியில் காங்கிரஸ் வேட்பாளர் நிற்க வேண்டும் என்று அன்பு தலைவர் கார்கே அவர்களிடம் கோரிக்கை வைப்பேன்''
தவெக தலைவர் விஜய், "எங்களுடன் கூட்டணி அமைக்கும் கட்சிகளுக்கு ஆட்சியிலும் பங்குதரப்படும்" என்று அறிவித்திருந்தார். அவரது இந்த அறிவிப்பு தமிழக அரசியலில் புதிதாக இருந்தது. இதுவரை ஆட்சி செய்த திமுக, அதிமுக இரு கட்சிகளும், தங்கள் ஆட்சிகளில் வேறு கட்சிகளுக்கு அமைச்சரவையில் வாய்ப்பு வழங்கவே இல்லை. விஜய்யின் ஆட்சியில் பங்கு என்ற குரலை பயன்படுத்தி, காங்கிரஸ் கட்சியினர், திமுக கூட்டணியில் ஆட்சியில் பங்கு, கனிசமான ‘சீட்’ என்று நெருக்கடி கொடுக்க ஆரம்பித்தனர்.
குறிப்பாக விருதுநகர் காங்கிரஸ் எம்.பி மாணிக்கம் தாகூர், ஆட்சியில் பங்கு என்பதை வெளிப்படையாக பேசி வந்ததோடு, கட்சித் தலைமையிடம் வலியுறுத்துவேன் என்று சமூக வலைதளங்களிலும் தனது கருத்தை பதிவு செய்து வருகிறார். இந்நிலையில், ராகுல் காந்தியிடம் நெருக்கமாக உள்ள காங்கிரஸ் நிர்வாகி, பிரவீன் சக்கரவர்த்தி, தவெக தலைவர் விஜய்யை சந்தித்து பேசியது, திமுக கூட்டணியில் புகைச்சலை ஏற்படுத்தியது.
இந்நிலையில் திமுக மதுரை மாநகர மாவட்டச் செயலாளர் கோ.தளபதி , ‘‘காங்கிரசில் சிலர் இருக்கிறார்கள். அவர்கள் பெயரை சொல்ல எனக்கு என்ன பயமா ? மாணிக்கம் தாகூர், ஜோதி மணி போன்றோரை தான் சொல்கிறேன். அவர்கள் எம்பியாகிவிட்டார்கள். அவர்கள் இந்த தேர்தலில் யார் எம்எல்ஏ ஆனால் என்ன, ஆகாவிட்டால் என்ன என நினைக்கிறார்கள். அவர்கள் இன்று அதில் பங்கு வேண்டும், இதில் பங்கு வேண்டும் என்கிறார்கள். இவையெல்லாற்றையும் தலைமை புரிந்து அவர்களுக்கு அடுத்த முறை ‘சீட்’டே கொடுக்கக்கூடாது.

அதற்கு நம்மால் ஆன காரியங்களை செய்ய வேண்டும். நான் எதற்காக சொல்கிறேன் என்றால், நாம் உணர்வோடு இண்டியா கூட்டணியில் இருக்கிறோம். இண்டியா கூட்டணியை காப்பாற்றி கொண்டு இருக்கிறோம். நாம் இல்லாவிட்டால் இண்டியா கூட்டணியே கிடையாது. டெல்லியில் இக்கூட்டணி பேசப்படுகிறது என்றால், அதற்கு முதல்வர் ஸ்டாலின், ம்மதா பானர்ஜி, அகிலேஷ் யாதவ் மூன்று பேர்தான் காரணம். இன்னும் சொல்ல பல விவகாரங்கள் உள்ளது அதனை எல்லாம் கூறினால், நல்லதல்ல தப்பாக போய்விடும்’’ என காங்கிரஸ் கட்சியை மிகக் கடுமையாக சாடி இருந்தார்.
இந்நிலையில் காங்கிரஸ் எம்.பி., மாணிக்கம் தாகூர் தனது எக்ஸ்தளப்பதிவில், ‘‘இந்த முறை மதுரை வடக்கு தொகுதியில் காங்கிரஸ் வேட்பாளர் நிற்க வேண்டும் என்று அன்பு தலைவர் கார்கே அவர்களிடம் கோரிக்கை வைப்பேன். தன்மான காக்க சிலருக்கு பாடம் புகட்ட வேண்டும். அதிகார திமிருடன் இருந்தால் தோழமை கட்சிகள் அமைதியாக இருக்கும் காலம் முடிந்துவிட்டது. Typo Error-கட்சிகள் முடிந்து விட்டது’’ என பதிலடி கொடுத்துள்ளார்.
