ராணிப்பேட்டையில் அமித்ஷா வருகையை வரவேற்று ஒட்டப்பட்ட போஸ்டரில் நடிகர் சந்தான பாரதி புகைப்படம் இடம்பெற்றது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
ராணிப்பேட்டை மாவட்டம் அரக்கோணம் அருகே தக்கோலத்தில் உள்ள சிஐஎஸ்எஃப் பயிற்சி மையத்தில் மத்திய தொழில் பாதுகாப்பு படையின் 56-ஆம் ஆண்டு தொடக்க தின விழா நடைபெற்று வருகிறது. இந்த நிகழ்ச்சியில் சிறப்பு அழைப்பாளராக மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா கலந்துக் கொண்டார்.
இந்த விழாவில் மத்திய அமைச்சர் அமித் ஷா: மாநில மொழிக்கும் மத்திய அரசு முக்கியத்துவம் அளித்து வருகிறது. பிரதமர் மோடி ஆட்சி அமைந்த பிறகுதான் சிஐஎஸ்எப் தேர்வு தமிழ் உள்ளிட்ட மாநில மொழிகளில் எழுத முடிகிறது. மருத்துவம், பொறியியல் உள்ளிட்ட படிப்புகளை தமிழில் படிப்பதற்குத் தேவையான நடவடிக்கைகளை தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் துரிதமாக மேற்கொள்ள வேண்டும் என்று நான் கேட்டுக் கொள்கிறேன். இதை அவர் விரைவில் செய்வார் என நான் நம்புகிறேன். பிரதமர் மோடி, தமிழுக்கும் அதன் பாரம்பரியத்துக்கும் முக்கியத்துவம் அளித்து வருகிறார் என்றார்.
இதையும் படிங்க: தமிழில் CISF தேர்வு .! தமிழ் மொழியில் மருத்துவ படிப்பு - அசத்தும் அமித்ஷா
இதனிடையே அமித்ஷாவின் ராணிப்பேட்டை வருகையை பாஜகவினர் போஸ்டர்கள், பிளக்ஸ்கள் வைத்து வரவேற்றனர். இதில் பாஜகவினர் ஓட்டிய போஸ்டர் வைரலாகி நெட்டிசன்கள் கிண்டல் அடித்து வருகின்றனர். அதில் அமித்ஷாவுக்கு பதில் நடிகர் சந்தான பாரதி புகைப்படம் கூடிய போஸ்டரில் ராணிப்பேட்டை மாவட்டத்துக்கு வருகைதரும் இந்தியாவின் இரும்புமனிதரே! வாழும் வரலாறே! வருக வருக வாசகங்கள் இடம்பெற்றிருந்தன. இந்த போஸ்டரை பாஜக மாநில செயற்குழு உறுப்பினர் அருள்மொழி அச்சடித்ததாக குறிப்பிடப்பட்டிருந்தது.
இதுகுறித்து தமிழக பாஜக செயற்குழு உறுப்பினர் அருள்மொழி விளக்கமளிக்கையில்: அந்த போஸ்டருக்கும் எனக்கும் எந்த சம்பந்தமும் இல்லை. அதை நான் ஒட்டவில்லை. என் பெயரை மிஸ் யூஸ் செய்துள்ளனர். இதுகுறித்து காவல்துறையில் புகார் அளிக்க உள்ளதாக தெரிவித்துள்ளார்.
