தர்மபுரி

காணும் பொங்கல் விழாவையொட்டி தர்மபுரியில் கறி, மீன் வாங்க பொதுமக்கள் கூட்டம் குவிந்ததால் விற்பனை களைக் கட்டியது.

பொங்கல் விழாவின் நிறைவு நாளான நேற்று காணும் பொங்கல் விழா கொண்டாடப்பட்டது. இந்த விழாவையொட்டி தர்மபுரி மாவட்டத்தில் கிராமப்புறங்களில் உள்ள கோவில்களில் பக்தர்கள் பொங்கல் வைத்து, ஆடு, கோழிகளை பலியிட்டு சாமிக்கு வழிபாடு நடத்துவர்.

இதேபோல் வீடுகளில் இறந்த மூதாதையர்களுக்கு புதுத்துணிகள் மற்றும் விருப்பமான உணவுகளை வைத்து படைப்பர்.

காணும் பொங்கல் நாளில் அசைவ உணவுகளை விரும்பி சாப்பிடுபவர்கள் வீடுகளில் மீன், கறி போன்றவை சமைப்பது வழக்கம்.

இதனால் நேற்று காலை முதலே தர்மபுரி பகுதியில் உள்ள கடைகளில் ஆடு மற்றும் கோழிக் கறிகள் விற்பனை களைகட்டியது. பல இடங்களில் சாலையோரங்களில் கறி விற்பனைக்காக புதிய கடைகளும் திறக்கப்பட்டு விற்பனைக் கூட்டம் அலைமோதியது.

தர்மபுரியில் ஆட்டுக்கறி 1 கிலோ ரூ.450-க்கு விற்பனையானது. கோழிக்கறி 1 கிலோ ரூ.130–க்கு விற்பனை செய்யப்பட்டது. நாட்டுக்கோழிக்கறி ஒரு கிலோ ரூ.250-க்கும் விற்பனை செய்யப்பட்டது.

இதேபோல் தர்மபுரியில் உள்ள மீன் மார்க்கெட்டிலும் மீன் விற்பனை விறுவிறுப்பாக நடந்தது. பல்வேறு வகையான கடல் மீன்கள் ஒரு கிலோ ரூ.100 முதல் ரூ.600 வரை பல்வேறு விற்கப்பட்டன.

ஆற்று மீன்கள் மற்றும் அணைக்கட்டுகள், ஏரிகளில் இருந்து வந்த மீன்கள் விற்பனைக்காக குவிக்கப்பட்டு இருந்தன. இவை இரகத்திற்கு ஏற்பட ரூ.80 முதல் ரூ.130 வரை பல்வேறு விலைகளில் விற்பனை செய்யப்பட்டன.

மீன் விற்பனையை பொருத்தவரை கடந்த ஆண்டைவிட இந்த ஆண்டு அதிகரித்து உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.