அடைக்கல அன்னை ஆலயத்தில் பொங்கல் விழா கொண்டாட்டம்; பல்வேறு கிராமங்களில் இருந்து மக்கள் வருகை...
அரியலூர்
அரியலூரில் உள்ள அடைக்கல அன்னை ஆலயத்தில் கொண்டாடப்பட்ட பொங்கல் விழாவில் கலந்து கொள்ள ஏராளமான கிராமங்களில் இருந்து மக்கள் வருகை தந்திருந்தனர்.
அரியலூர் மாவட்டம், திருமானூர் அருகே ஏலாக்குறிச்சியில் வீரமாமுனிவரால் கட்டப்பட்டது, கிறித்துவ ஆலயங்களில் பழமை வாய்ந்தது, தமிழ்நாடு சுற்றுலாத் தலங்களில் ஒன்று என பல்வேறு பெருமைக்கு உரியது அடைக்கல அன்னை ஆலயம்.
இந்த ஆலயத்தில், அடைக்கல அன்னை தமிழ் அன்னையாய் வடிவமைக்கப்பட்டுள்ளது. இந்த அன்னைக்கு ஒவ்வொரு வருடமும் பொங்கல் விழா மிகச் சிறப்பாக கொண்டாடப்படுவது வழக்கம்.
அதேபோல, இந்த வருடமும் பொங்கல் விழா வெகு சிறப்பாக கொண்டாடப்பட்டது. ஆலயத்தின் முன்பு உள்ள வளாகத்தில் நடைபெற்ற இந்த பொங்கல் விழாவுக்கு பங்கு தந்தை சுவைக்கின் தலைமை வகித்தார். அரியலூர் தாசில்தார் முத்துலட்சுமி முன்னிலை வகித்தார். உதவி பங்குதந்தை திமோத்தி வரவேற்றார்.
இந்த விழாவில் அரியலூர் கோட்டாட்சியர் மோகனராஜன் பொங்கல் பானையில், பச்சரிசியையும் பாலையும் ஊற்றி தொடங்கி வைத்தார்.
அதனைத் தொடர்ந்து இருங்கலூர் பங்கு தந்தை அகஸ்டின் தலைமையில், பொங்கல் விழா சிறப்பு திருப்பலி நடைப்பெற்றது.
இந்த பொங்கல் விழாவில் திருமானூர் அருகே உள்ள பல்வேறு கிராமங்களில் இருந்து கிறித்தவர்கள் மற்றும் கிராம மக்கள் ஏராளமானோர் வருகைத் தந்து அடைக்கல அன்னையின் முன்பு பொங்கல் வைத்து கொண்டாடி மகிழ்ந்தனர்.