Police Rounded Up Intelligence Officer

நேற்று நடந்த ஆசிரியர்கள் போராட்டத்தின்போது, உளவு பார்க்க வந்திருந்த எஸ்.பி.சி.ஐ.டி. அதிகாரி ஒருவரை, போலீஸ் வேனில் ஏற்ற முயன்ற சம்பவம் நடந்துள்ளது.

தமிழக அரசு பழைய ஓய்வுதிய திட்டத்தை அமல்படுத்த வேண்டும், இடைநிலை ஆசிரியர்களுக்கு இடையே உள்ள ஊதிய முரண்பாட்டை களைய வேண்டும் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை முன்வைத்து, ஜாக்டோ ஜியோ அமைப்பினர் இன்று சென்னை தலைமைச் செயலகத்தில் முற்றுகைப் போராட்டம் நடத்த உள்ளதாக தெரிவித்திருந்தனர். இதையடுத்து, தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து முற்றுகைப் போராட்டத்தில் பங்கேற்க சென்னை புறப்பட்ட ஆசிரியர்களை போலீசார் கைது செய்தனர்.

நேற்று காலை சென்னை வாலாஜா சாலை, அண்ணா சாலை மற்றும் காமராஜர் சாலை உள்ளிட்ட பகுதிகளில் ஜாக்டோ ஜியோ அமைப்பினர் ஒன்றுகூடி சாலை மறியலில் ஈடுபட்டனர். இதில், பங்கேற்ற ஆசிரியர்களை போலீசார் கைது செய்து, எழும்பூரில் உள்ள தனியார் பள்ளி ஒன்றில் அடைத்து வைத்தனர். இந்த நிலையில், போராட்டத்தை உளவு பார்க்க வந்திருந்த எஸ்.பி.சி.ஐ.டி. சிறப்பு இன்ஸ்பெக்டர் சுப்புராஜ்,வெள்ளைநிற சட்டை மற்றும் வெள்ளை நிற பேண்ட் அணிந்து ஆசிரியர் போன்றே காட்சி அளித்தார். 

சுப்புராஜை, பத்திரிகையாளர்கள் அடையாளம் கண்டு கொண்டனர். ஆனால், பணியில் இருந்த போலீசாருக்கு அவர் யார் என்பது தெரியவில்லை. போலீசார் அவரை, ஆசிரியர் என்றே நினைத்து சுப்புராஜை, வேனில் ஏற வலியுறுத்தினர். அப்போது, அந்த இடத்துக்கு கூடுதல் கமிஷனர் சாரங்கன் வந்து, என்ன பிரச்சனை என்று விசாரித்தபோது, அவர் எஸ்.பி.சி.ஐ.டி போலீஸ் என்பது தெரியவந்தது.