மிக்ஜாம் புயலால் உயிரிழந்தோருக்கு பிரதமர் மோடி இரங்கல் தெரிவித்துள்ளார்

வங்கக்கடலில் உருவான மிக்ஜாம் புயல், தீவிரப்புயலாக வலுப்பெற்று தெற்கு ஆந்திராவின் நெல்லூர் - மசூலிப்பட்டினம் அருகே கரையைக் கடந்தது. இப்புயலால் புதுச்சேரி, தமிழ்நாடு, ஆந்திரா ஆகிய மாநிலங்கள் பெரும் பாதிப்புக்கு உள்ளாகியுள்ளன.

தலைநகர் சென்னையை பொறுத்தவரை 47 ஆண்டுகளில் இல்லாத அளவிற்கு தலைநகர் சென்னையில் கனமழை பெய்ததால் மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டது. சாலைகளில் வெள்ள நீர் பெருக்கெடுத்து ஓடியது. பலத்த சூறாவளிக் காற்றுடன் கனமழை பெய்ததால் மரங்கள் சரிந்து விழுந்தன.

தாழ்வான பகுதிகளில் நீர் தேங்கியதால் அப்பகுதி மக்கள் பாதுகாப்பான இடங்களில் தங்க வைக்கப்பட்டு அவர்களுக்கு தேவையான உதவிகள் செய்து தரப்படுகின்றன. மாநகராட்சி மேயர் மற்றும் அதிகாரிகள் இரவு பகல் பாராமல் களத்தில் உள்ளனர். முதல்வர் ஸ்டாலின் நேரடியாக நிலைமையை கண்காணித்து வருகிறார். கட்டுப்பாட்டு அறை அமைக்கப்பட்டு நிலைமை தொடர்ந்து கண்காணிக்கப்பட்டது.

இருப்பினும், மிக்ஜாம் புயல் கனமழையால் தமிழகத்தில் மட்டும் 7 பேர் பரிதாபமாக உயிரிழந்துள்ளனர். அதேபோல், புதுச்சேரி, ஆந்திர மாநிலங்களிலும் உயிரிழப்புகள் ஏற்பட்டுள்ளன.

தமிழ்நாட்டிற்கு ரூ.5060 கோடி இடைக்கால நிவாரணம்: முதல்வர் ஸ்டாலினுக்கு பாஜக கேள்வி!

இந்த நிலையில், மிக்ஜாம் புயலால் உயிரிழந்தோருக்கு பிரதமர் மோடி இரங்கல் தெரிவித்துள்ளார். இதுகுறித்து பிரதமர் மோடி தனது எக்ஸ் பக்கத்தில், “மிக்ஜாம் புயலால், குறிப்பாக தமிழ்நாடு, ஆந்திரா மற்றும் புதுச்சேரியில் தங்கள் அன்புக்குரியவர்களை இழந்தவர்களின் குடும்பத்தினருக்கு ஆழ்ந்த இரங்கல். புயலால் காயமடைந்தவர்கள், பாதிக்கப்பட்டவர்கள் விரைவில் குணமடைய பிரார்த்திக்கிறேன். அதிகாரிகள் பாதிக்கப்பட்டவர்களுக்கு உதவ அயராது உழைத்து வருகின்றனர். நிலைமை முழுமையாக சீராகும் வரை தங்கள் பணியை அவர்கள் தொடர்வார்கள்.” என பதிவிட்டுள்ளார்.

Scroll to load tweet…

முன்னதாக, மிக்ஜாம் புயலால் ஏற்பட்ட கடும் சேதங்களை சீர் செய்ய இடைக்கால நிவாரணமாக ரூ.5060 கோடி கேட்டு பிரதமர் மோடிக்கு முதல்வர் ஸ்டாலின் கடிதம் எழுதியிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.