மக்களுக்காக உயிர் தியாகம் செய்த பெரியபாண்டி உண்மையான ஹீரோ! விஷால் டுவிட்டரில் உருக்கம்!
கொள்ளையர்களால் சுட்டுக்கொல்லப்பட்ட காவல் ஆய்வாளர் பெரியபாண்டியன், ஒரு உண்மையான ஹீரோ என்று, நடிகர் விஷால் தனது டுவிட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.
சென்னை, கொளத்தூரில் நடந்த நகைக்கடை கொள்ளை தொடர்பாக ராஜஸ்தானைச் சேர்ந்த இரண்டு பேரை பிடிக்க மதுரவாயல் இன்ஸ்பெக்டர் பெரியபாண்டி, கொளத்தூர் ஆய்வாளர் முனிசேகர் தலைமையில் 6 பேர் கொண்ட தனிப்படை ராஜஸ்தான் சென்றது. அவர்கள் தீவிர தேடுதல் வேட்டை நடத்தியதில் கொள்ளையர்கள் நாதுராம், தினேஷ், சௌத்ரி ஆகியோர் பாலி மாவட்டம் ராம்புர்கலான் என்ற கிராமத்தில் பதுங்கி இருப்பது தெரிய வந்ததது.
இதையடுத்து இன்ஸ்பெக்டர் பெரியபாண்டி, முனிசேகர் குழுவினர் அங்கு சென்றனர். கொள்ளையர்களை பிடிக்க கடும் துப்பாக்கிச் சண்டை நடந்தது. இதில், சென்னை மதுரவாயல் சட்டம் ஒழுங்கு இன்ஸ்பெக்டர் பெரியபாண்டி துப்பாக்கி குண்டு பாய்ந்து சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். கொளத்தூர் காவல் ஆய்வாளர் முனிசேகர் தோளில் குண்டு பாய்ந்து படுகாயம் அடைந்தார். உடன் சென்ற போலீஸாரும் காயம் அடைந்தனர்.
இந்த சம்பவம் தமிழகம் முழுவதும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இது குறித்த தகவல் அறிந்ததும், இணை ஆணையர் சந்தோஷ்குமார் தலைமையில் தனிப்படை ஒன்று ராஜஸ்தான் புறப்பட்டுச் சென்றது. சந்தோஷ்குமார் சம்பவ இடத்தைப் பார்வையிட்டு, காயமடைந்தவர்களை சந்தித்து ஆறுதல் கூறினார்.
சுட்டுக் கொல்லப்பட்ட இன்ஸ்பெக்டர் பெரிய பாண்டியின் உடல் ஜோத்பூர் அரசு மருத்துவமனையில் பிரேத பரிசோதனை செய்யப்பட்டது. இதையடுத்து பெரியபாண்டியின் உடல் இன்று விமானம் மூலம் சென்னை கொண்டு வரப்படுகிறது. சென்னையில் அவரது உடலுக்கு அரசு சார்பில் இறுதி மரியாதை செய்யப்பட்டு பின்னர் விமானம் மூலம் தூத்துக்குடி கொண்டு செல்லப்படுகிறது. இதையடுத்து, திருநெல்வேலி உள்ள அவரது சொந்த உருக்கு பெரிய பாண்டியன் உடல் கொண்டு செல்லப்படுகிறது.
கொள்ளையர்களால் சுட்டுக்கொல்லப்பட்ட காவல் ஆய்வாளர் பெரியபாண்டியன் குடும்பத்துக்கு தமிழக அரசு ஒரு கோடி ரூபாய் இழப்பீட்டுத் தொகை அறிவித்துள்ளது.
அரசியல்கட்சி தலைவர்கள், காவல்துறை அதிகாரிகள் உள்ளிட்ட பலர் பெரியபாண்டியன் குடும்பத்தாருக்கு நேரில் சென்று ஆறுதல் கூறி வருகின்றனர். இந்த நிலையில், நடிகர் விஷால், உயிரிழந்த பெரியபாண்டியன் ஒரு உண்மையான ஹீரோ என்று தனது டுவிட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.
இது குறித்து அவர் டுவிட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ளதாவது: கொள்ளையர்களைப் பிடிக்கச் சென்ற போலீஸ் இன்ஸ்பெக்டர் பெரியபாண்டி உயிரிழந்தார் என்ற செய்தி அதிர்ச்சியளிக்கிறது. அவர் உண்மையான ஹீரோ. அவர் மக்களை பாதுக்காக்கும் பணிக்காக தன் உயிரை தியாகம் செய்திருக்கிறார். அவரது துணிவுக்காக அவரை நான் வணங்குகிறேன். அவருடைய இழப்பு தாங்கிக் கொள்ள முடியாது மற்றும் இதற்கு காரணமான நபர்கள் கடுமையாக தண்டிக்கப்பட வேண்டும். இந்த சம்பபவங்கள் இனி நடக்கக் கூடாது என்று கூறியுள்ளார்.