தாமிரபரணியில் இருந்து தண்ணீர் எடுக்க தடை - பெப்சி,கோக் ஆலைகளுக்கு மீண்டும் ஆப்பு
தாமிரபரணி ஆற்றில் இருந்து தொழிற்சாலைகள் தண்ணீர் எடுக்க தடை விதிக்கப்பட்டுள்ளது.
தூத்துக்குடி ஆட்சியர் ம.ரவிக்குமார் தலைமையில் நடைபெற்ற குறைதீர் கூட்டத்தில், பெப்சி, கோக் குளிர்பான ஆலைகளுக்கு தாமிரபரணி ஆற்றிலிருந்து தண்ணீர் வழங்க தடை விதிக்க வேண்டும் என்று தூத்துக்குடி மாவட்ட விவசாயிகள் வலியுறுத்தினர்.
தூத்துக்குடி மாவட்டத்துக்கு வரும் தண்ணீரைத்தான் பெப்சி, கோக் நிறுவனங்கள் எடுக்கின்றன. எனவே, குளிர்பான ஆலைகளுக்கு தாமிரபரணி தண்ணீர் வழங்குவதை நிரந்தரமாகத் தடை செய்ய வேண்டும். ஆட்சியர் இதற்கான நடவடிக்கையை எடுக்க வேண்டும் என்றும் விவசாயிகள் கோரிக்கை விடுத்து இருந்தனர்.
இந்நிலையில், பொதுமக்களின் குடிநீர் தேவையை கருத்தில் கொண்டு மே 1ஆம் தேதி முதல் தாமிரபரணி ஆற்றில் தண்ணீர் எடுக்க 8 ஆலைகளுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.
பெப்சி, கோக், மதுரா கோட்ஸ் நிறுவனத்திற்கு சொந்தமான 2 ஆலைகள், 3 காகித ஆலைகள், சிமெண்ட் ஆலை ஆகியவற்றிற்கு தண்ணீர் எடுக்க தடை விதிக்கப்பட்டுள்ளது.