People who suffer from drinking water for one and a half months Fifty more people are asking for drinking water
திருப்பூர்
ஒன்றரை மாதங்களாக குடிநீர் இல்லாமல் அவதிபடும் மக்கள் புகார் கொடுத்தும் நடவடிக்கை எடுக்காததால் திருப்பூரில் சாலை மறியலில் ஈடுபட்டனர்.
திருப்பூர் மாநகராட்சி 43–வது வார்டுக்கு உட்பட்ட பெரியதோட்டம் 7–வது, 9–வது வீதிகளில் ஆயிரக்கணக்கானவர்கள் வசிக்கின்றனர்.
இந்தப் பகுதியில் அதிகமாக காம்பௌண்டு வீடுகள் உள்ளன. ஒரே காம்பவுண்டில் பத்துக்கும் மேற்பட்ட வீடுகள் காணப்படுகின்றன. இந்தப் பகுதிக்கு நான்கு நாள்களுக்கு ஒருமுறை குழாய் மூலம் குடிநீர் விநியோகிக்கப்பட்டு வந்தது.
இந்த நிலையில் கடந்த 27–ஆம் தேதி இந்தப் பகுதியில் குடிநீர் விநியோகம் செய்யப்பட்டது. அதன்பின்னர், நேற்று வரை குடிநீர் விநியோகம் செய்யப்படவில்லை. இதனால் அந்தப் பகுதி மக்களுக்கு குடிநீர் கிடைப்பதில் பெரும் சிக்கல் உண்டானது.
மேலும், அந்தப் பகுதியில் ஆழ்குழாய் கிணறு அமைத்து மின்மோட்டார் பொருத்தி தண்ணீர் விநியோகம் செய்யப்பட்டது. கடந்த ஒன்றரை மாதங்களாக மின்மோட்டார் பழுதடைந்து இருப்பதால் அந்த தண்ணீரும் மக்களுக்கு கிடைக்கவில்லை.
இதனால் கடுமையான சிரமத்தை சந்தித்த மக்கள் 50–க்கும் மேற்பட்டவர்கள் நேற்று மதியம் 1.45 மணி அளவில் பி.எஸ்.என்.எல். அலுவலகம் அருகே காங்கேயம் சாலையில் திடீர் மறியலில் ஈடுபட்டனர்.
இதுகுறித்து தகவல் அறிந்ததும் திருப்பூர் தெற்கு காவல் ஆய்வாளார் தென்னரசன் மற்றும் மாநகராட்சி உதவி பொறியாளர் முனியாண்டி ஆகியோர் சென்று சாலைமறியலில் ஈடுபட்டவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினார்கள்.
பழுதடைந்த மின்மோட்டாரை விரைவில் பழுது நீக்கி கொடுப்பதாகவும், மாநகராட்சி மூலம் நான்கு நாள்களுக்கு ஒருமுறை குடிநீர் வினியோகம் செய்வதற்கும் ஏற்பாடு செய்யப்படும் என்று உதவி பொறியாளர் தெரிவித்தார்.
மேலும் காம்பௌண்டு வீடுகள் உள்ள பகுதிக்கு கூடுதலாக குடிநீர் குழாய் இணைப்புக்கு விண்ணப்பித்தால் உடனடியாக குழாய் இணைப்பு வழங்குவதற்கு ஏற்பாடு செய்து கொடுக்கப்படும் என்றும் அவர் தெரிவித்தார்.
இதனைத் தொடர்ந்து சமாதானம் அடைந்த மக்கள் மறியலை கைவிட்டு அங்கிருந்து கலைந்து சென்றனர்.
